Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

விஜய் கட்சியில் காங்கிரசுக்கு 50 சீட்? பா.ஜ., வளர்ச்சியை தடுக்க ராகுல் வியூகம்

விஜய் கட்சியில் காங்கிரசுக்கு 50 சீட்? பா.ஜ., வளர்ச்சியை தடுக்க ராகுல் வியூகம்

29 மார்கழி 2025 திங்கள் 09:10 | பார்வைகள் : 196


காங்கிரசை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள த.வெ.க., காங்கிரசுக்கு 50 தொகுதிகள் தர முன் வந்துள்ளது' என தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என கூறி வரும் விஜய், தி.மு.க.,வின் நீண்ட கால கூட்டணி கட்சியான காங்கிரசை இழுக்க முயற்சித்து வருகிறார்.

ஆறுதல்

கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தபோது, விஜய்க்கு தொலைபேசியில் காங்., மூத்த தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். விஜயை காங்கிரஸ் தலைமை விரும்பினாலும், 22 ஆண்டுகளாக நீடிக்கும் தி.மு.க., உடனான கூட்டணியை, சட்டென முறித்துக்கொள்ள விரும்பவில்லை.

மேலும், லோக்சபா, ராஜ்யசபாவில் தி.மு.க.,வின் எம்.பி.,க்கள் பலம், பா.ஜ., அரசை எதிர்கொள்ள அவசியம் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ஆனாலும், ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் உள்ளிட்டோரும், தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலரும், த.வெ.க., கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது.

காங்., மேலிட தலைவர்களின் ஆசியுடன், கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த 5ம் தேதி விஜயை சென்னையில் சந்தித்தார். இது, தி.மு.க.,வை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில், த.வெ.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 50 தொகுதிகளை கொடுக்க தயாராக இருப்பதாக, விஜய் தரப்பில் இருந்து ராகுலுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., நிலைமை இப்போது மோசமாக உள்ளது.

சந்தேகம்

சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அக்கட்சி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை பயன்படுத்தி, அ.தி.மு.க., இடத்திற்கு வர பா.ஜ., திட்டமிடுகிறது. இதை தடுத்து, அ.தி.மு.க., இடத்திற்கு த.வெ.க., வர வேண்டும். அப்போது தான், தமிழகத்தில் பா.ஜ., எழுச்சியை தடுக்க முடியும் என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் போன்றோர் நினைக்கின்றனர்.

வரும் தேர்தலில், த.வெ.க., 20 சதவீத ஓட்டுகளை பெற்றாலே, அ.தி.மு.க., இடத்தை பிடித்து விடும் என்பது காங்., மேலிடத்தின் கணிப்பாக உள்ளது. இதன் காரணமாகவே, விஜயை சமீபத்தில் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தார். லோக்சபா தேர்தல் தான் காங்கிரசுக்கு முக்கியம். சட்டசபை தேர்தலில் வென்றாலும், தி.மு.க., ஆட்சியில் பங்கு தரப் போவதில்லை.

தமிழக சட்டசபை தேர்தலுடன், மேற்கு வங்க சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. அங்கு, பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வருகின்றன. இது நடந்து, தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க இடங்களை பா.ஜ., பிடித்தால், தேசிய அளவில் காங்கிரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

எனவே, அ.தி.மு.க., இடத்திற்கு பா.ஜ., வராமல் தடுக்க, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என, காங்கிரசில் உள்ள பலர் சோனியா, ராகுலிடம் கூறி வருகின்றனர். இதை அவர்களும் மறுக்கவில்லை; தி.மு.க., கூட்டணியை முறிக்கவும் தயங்குகின்றனர்.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. இதற்கு தி.மு.க., உடன்படாவிட்டால், கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்