Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் எதிரிகளை சந்திக்கும் ராகுல் :ஜெர்மனி பயணம் குறித்து பா.ஜ., குற்றஞ்சாட்டு

இந்தியாவின் எதிரிகளை சந்திக்கும் ராகுல் :ஜெர்மனி பயணம் குறித்து பா.ஜ., குற்றஞ்சாட்டு

21 மார்கழி 2025 ஞாயிறு 11:14 | பார்வைகள் : 144


ஜெர்மனி சென்றுள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நம் நாட் டின் எதிரிகளை மீண்டுமொரு முறை சந்தித்துள்ளார். வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நமக்கு எதிராக என்ன மாதிரியான சதி திட்டத்தை அவர் தீட்டுகிறார் என்று தெரியவில்லை,” என, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா குற்றஞ்சாட்டினார்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு, ஐந்து நாட்கள் பயணமாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சென்றுள்ளார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், அந்நாட்டின் சில அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நடந்த நிலையில், ஜெர்மனிக்கு அவர் சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ஜெர்மனியில் ஹெர்டி பள்ளியின் தலைவர் கார்னேலியா வோல் என்பவருடன் ராகுல் இருக்கும் புகைப்படத்தை காட்டினார்.

தொடர்ந்து, கவுரவ் பாட்டியா கூறியதாவது:

மத்திய ஐரோப்பிய பல்கலையின் அறங்காவலர்களில் ஒருவராக கார்னேலியா வோல் உள்ளார்.

இந்த பல்கலைக்கு, நம் நாட்டுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் நிதியுதவி அளிக்கிறார். இந்த சூழலில், கார்னேலியா வோலை ராகுல் சந்தித்து உள்ளார்.

நம் நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு தீயசக்திகளை சந்திப்பதையே அவர் வழக்கமாக வைத்துள்ளார். அவர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சதி திட்டத்தை ராகுல் தீட்டுகிறார் என தெரியவில்லை.

ஜார்ஜ் சோரோசும், ராகுலும் உடல் அளவில் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களுக்கு ஒரே ஆன்மா தான். அது, எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே சிந்தித்து கொண்டிருக்கும்.

பார்லி., கூட்டத்தொடர் நடக்கும் போது, வெளிநாடுகளுக்கு சென்று நாட்டின் ஒருமைப்பாட்டை கெடுக்கும் நபர்களை ராகுல் சந்திப்பது ஏன்? இதுபோன்ற தேசவிரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவது முதன்முறையல்ல. இந்தியாவில் இருக்கும் இத்தகைய நச்சுப்பாம்புகள் நசுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்