Paristamil Navigation Paristamil advert login

அழற்சி எதிர்ப்பு மருந்துகளை தவிர்த்து பராசிட்டமோலை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் அறிவுரை!!

அழற்சி எதிர்ப்பு மருந்துகளை தவிர்த்து பராசிட்டமோலை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் அறிவுரை!!

17 மார்கழி 2025 புதன் 21:05 | பார்வைகள் : 109


குளிர்காலத் தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (anti-inflammatoires) தவிர்த்து பராசிட்டமோல் (paracétamol) மருந்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

இபுபுரோஃபேன் (ibuprofène) மற்றும் கீட்டோபுரோஃபேன் (kétoprofène) போன்ற ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (AINS), நியூமோகாக்கஸ் போன்ற பாக்டீரியா தொற்றுகளின் அறிகுறிகளை மறைத்து, சரியான சிகிச்சையை தாமதப்படுத்தக்கூடும் என்று இன்று தேசிய மருந்து பாதுகாப்பு அமைப்பு (ANSM) எச்சரித்துள்ளது.

மேலும் காய்ச்சல் அல்லது குளிர்காலத் தொற்றுகளுடன் தொடர்புடைய வலி , தொண்டை அழற்சி (angine), பிராங்சித் (bronchite), அல்லது காதுத் தொற்று (otite) போன்றவை  ஏற்பட்டால், அழற்சி எதிர்ப்பு மருந்துகளை விட பராசிட்டமோலை பயன்படுத்துவது சிறந்தது என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

“2019 ஜனவரி 1 முதல் 2023 ஜூன் 30 வரை, பிரான்சில் இபுபுரோஃபேனுடன் தொடர்புடைய 162 கடுமையான வழக்குகள் மற்றும் கீட்டோபுரோஃபேனுடன் தொடர்புடைய 54 வழக்குகள் பதிவாகியுள்ளன.” இந்த தொற்றுகள் பெரும்பாலும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் அல்லது நியூமோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்பட்டு, செப்சிஸ், செப்டிக் ஷாக், மெனின்ஜிட்டிஸ் அல்லது கடுமையான தோல் தொற்றுகள் போன்ற தீவிர சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக ANSM விளக்குகிறது. இவற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் குழந்தைகளும், நல்ல உடல்நலத்தில் இருந்த இளம் வயதினரும் அடங்குவர்.

“பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அல்லது ENT (மூக்கு-காது-தொண்டை) தொற்றுகள் தொண்டை அழற்சி, காதுத் தொற்று காரணமாக இபுபுரோஃபேன் எடுத்திருந்தனர்; அல்லது முறிவு, மூட்டு வலி போன்ற வலிகளுக்காக கீட்டோபுரோஃபேன் எடுத்திருந்தனர்” என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் பருவகால காய்ச்சல் (ஃப்ளூ) தொற்று வேகமாக பரவி வருகிறது; கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி எந்தவொரு மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்