Paristamil Navigation Paristamil advert login

விமான சேவையை 10 சதவீதம் குறைக்கும்படி இண்டிகோவுக்கு மத்திய அரசு உத்தரவு

விமான சேவையை 10 சதவீதம் குறைக்கும்படி இண்டிகோவுக்கு மத்திய அரசு உத்தரவு

10 மார்கழி 2025 புதன் 07:15 | பார்வைகள் : 100


இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், நாடு முழுதும் விமான சேவை முடங்கி உள்ள நிலையில், குளிர் கால அட்டவணையில், 10 சதவீத சேவையை குறைக்கும்படி, அந்நிறுவனத்துக்கு, டி.ஜி.சி.ஏ., எனப்படும், சிவில் விமான போக்கு வரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

விமானி மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்டவற்றில் விமான போக்குவரத்து அமைச்சகம் தி ருத்தம் செய்தது.

அனுமதி

இந்த புதிய நடைமுறை, நவ., 1ல் அமலுக்கு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, நம் நாட்டில் அதிக விமான சேவைகளை வழங்கும், தனியார் துறையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான இண்டிகோ இணங்கவில்லை.

இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுதும் பாதிக்கப் பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக முடங்கி உள்ள சேவையால், லட்சக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக விமான சேவை மீண்டு வருவதாக இண்டிகோ தெரிவித்தாலும், கள நிலவரம் அப்படி இல்லை.

இந்நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., நேற்று பிறப்பித்த உத்தரவு: குளிர் கால அட்டவணை யின் கீழ், நவம்பரில், 15,014 வாராந்திர புறப்பாடுகளுடன், மொத்தம், 64,346 விமானங்களை இயக்க இண்டிகோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம், 59,438 விமானங்களை மட்டுமே இயக்கியதுடன், 951 விமான சேவைகளை ரத்து செய்தது.

கோடை காலத்துடன் ஒப்பிடுகையில், குளிர் காலத்தில், அதை விட 6 சதவீதம் அதிகமான விமானங்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் அந்நிறுவனம் திட்டமிட்டபடி விமானங்களை இயக்கவில்லை.

அட்டவணை

தற்போதைய நெருக்கடி காரணமாக, குளிர் கால அட்டவணையில், 10 சதவீத விமான சேவையை குறைக்கும்படி இண்டிகோவுக்கு உத்தரவிடப் படுகிறது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதபடி, விமான சேவையை குறைக்க வேண்டும். திருத்தப்பட்ட அட்டவணை பட்டியலை, இன்று மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்