அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் சேவைகள் நிறுத்தம்
24 ஐப்பசி 2025 வெள்ளி 10:23 | பார்வைகள் : 256
அமெரிக்காவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் நாடு முழுவதும் தனது அனைத்து விமானப் போக்குவரத்துகளையும் அதிரடியாக நிறுத்தி வைத்ததாக கூறப்படுகின்றது.
இந்த திடீர் முடிவுக்குக் காரணம், நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் மிக மோசமான தகவல் தொழில்நுட்ப (IT) செயலிழப்பு ஆகும்.
நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை (Ground Stop) விதிக்கப்பட்டதால், பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் ஐ.டி அமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிரமத்துக்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது. இந்த திடீர் தொழில்நுட்பப் பழுது, அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து அமைப்பையே உலுக்கியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு பெரிய விமான நிறுவனம் தனது அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். இந்நிலையில் இந்தச் சம்பவம் விமானப் பயணத்தின் நம்பகத்தன்மை குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan