இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு

23 ஐப்பசி 2025 வியாழன் 06:01 | பார்வைகள் : 101
இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முழு மனநிறைவுடன் ரசித்து செல்வர். சிலர் வேண்டுமென்றே இந்தியா குறித்து நெகட்டிவ் கருத்துகளை பரப்புவதை வழக்கமாக வைத்திருப்பர். நேர்மறையை விட எதிர்மறையே அதிவேகமாக பரவும் என்பதுபோல, இந்தியா பற்றிய அந்த எதிர்மறை கருத்துகளே அதிகளவு பரவி, இந்தியா பற்றிய தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி விடுகின்றன. ஆனால், உண்மையில் இந்தியா வந்து அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் பெருமிதத்துடனேயே பதிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்து திரும்பிய ஒரு பெண், 'டிக்டாக்' சமூக வலைதளத்தில் இந்தியா பற்றி பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில் அவர் பேசியதாவது: நான் இந்தியா சென்று திரும்பியுள்ளேன். என் முதல் பயணமான இதுவே ஒரு வரலாற்றுப் பயணமாகவும் இருந்தது.
அந்த பயணத்தின் போது நான் கவனித்த சில விஷயங்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அமெரிக்கா பெண்ணான நான், ஒரு இந்திய பெண் நண்பருடன் தங்கியிருந்தேன். அவருடனே பெரும்பாலும் இருந்தேன். தென் இந்தியாவின் பெங்களூரு, கொச்சி நகரங்களுக்கு நாங்கள் சென்றோம்.
அனைத்தும் தவறு
இந்தியாவிற்கு செல்லும்முன், அங்கு நிலைமை எப்படியிருக்கும் என ஆராய்ந்தேன். பிகினி மற்றும் சிறிய அளவிலான உடைகளை உடுத்தாதே, பழங்கள், புதிய உணவுகளை சாப்பிடாதீர்கள், சுத்தமான தண்ணீர் இருக்காது, அந்த தண்ணீரை நீங்கள் குடிக்க கூட முடியாது என பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்தனர். இருந்தாலும் நம்பிக்கையுடன் சென்றேன்.
பின்பே, நான் கேள்விப்பட்ட அனைத்தும் தவறு என்பதை புரிந்துகொண்டேன். அங்கு பல பெண்கள் ஸ்லீவ்லெஸ் டாப்களும், ஷார்ட்ஸ்களும் அணிந்திருந்தனர். உடை அவர்களுக்கு பெரிய விஷயமாக இல்லை. அதேபோல், உணவுகளும் நன்றாக சாப்பிட்டேன். எந்தவித வயிற்றுப்போக்கும் ஏற்படவில்லை, நன்றாகவே உணர்ந்தேன். தண்ணீரும் பருகும்படியே இருந்தது. பாட்டில் தண்ணீரும் அருமையாக இருந்தது.
சுத்தம்
உண்மையில், இது ஒரு அற்புதமான இடம். இந்தியாவின் மக்கள் அடர்த்தி என்பது நம்மை அதிர வைக்கும் அளவிற்கு உள்ளது. இப்போது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பரப்பளவில் அமெரிக்கா உடன் ஒப்பிடும்போது சிறிய நாடாக இருந்தாலும், இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு இவ்வளவு சுத்தமாக இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
நான் அமெரிக்காவின் ஒரிகனில் வசிக்கிறேன். என் நாயுடன் வாக்கிங் செல்கையில் இங்கு சாலையோரங்களில் குப்பை நிறைந்திருக்கும். மக்கள் காரிலிருந்தபடி குப்பையை வீசி செல்வர். அமெரிக்காவில் இந்தியா அளவிற்கு மக்கள் எண்ணிக்கை இருந்திருந்தால், நம்மால் குப்பையை கையாள முடியாது. எனவே, இந்தியா இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதே பெரும் சாதனை தான்.
பாதுகாப்பு
இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என சிலர் சொல்கின்றனர். ஆனால், நான் தென் இந்தியாவில் ஒரு பெண்ணுடன் தான் வசித்தேன். எனக்கு எந்த நேரத்திலும் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படவில்லை. நான் வயதானவளாக இருக்கிறேன். ஒருவேளை இளம்பெண்ணாக இருந்திருந்தால் வேறு மாதிரியான அனுபமாக மாறியிருக்கலாம். ஒரு வெள்ளைக்காரராக இருப்பதால் என்னை அனைவரும் ஒருமாதிரி பார்ப்பார்கள் என நினைத்தேன். ஆனால் நான் சென்ற இடங்களில் அதுபோன்ற பிரச்னை இல்லை.
நியூயார்க்கில் ஏமாற்றம்
இந்தியர்கள், வெளிநாட்டினரை ஏமாற்றுவார்கள் என்றெல்லாம் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் நான் சந்தித்த எல்லோரும் மிகவும் நாகரிகமாகவும், அன்பாகவும், நேர்மையாகவும் இருந்தார்கள். என்னை யாரும் ஏமாற்றவில்லை. உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் நியூயார்க் சென்றபோது பலமுறை ஏமாற்றப்பட்டேன். உதாரணமாக, 10 டாலர் மதிப்பு கொண்ட ஒரு சிகரெட் எவ்வளவு எனக் கேட்டால், 20 டாலர் என சொல்வார்கள். இந்தியாவைவிட நியூயார்க்கில் தான் நான் அதிகம் ஏமாற்றப்பட்டேன்.
இந்தியா போவது ஒரு “அதிசய உலகம்” போல் இருந்தது. நம்மிடம் சாதாரணமாக உள்ள அனைத்தும் அங்கு தலைகீழாகவே செயல்படுகிறது. அதைப் பற்றியும் ஒரு தனி வீடியோ போடலாம். நம்மிடம் (அமெரிக்காவில்) இருக்கும் நடைமுறை அங்கு வித்தியாசமாக இருக்கும். வாகனங்கள் எதிர்புறமும் வருகின்றன. இதுபோன்ற பல விஷயங்களை வித்தியாசமாக பார்த்தேன். இவ்வாறு அதில் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.