Paristamil Navigation Paristamil advert login

எஸ்.ஐ.ஆர்., பணியை முடக்க தி.மு.க., அரசு திட்டம்: இபிஎஸ்

எஸ்.ஐ.ஆர்., பணியை முடக்க தி.மு.க., அரசு திட்டம்: இபிஎஸ்

15 கார்த்திகை 2025 சனி 14:02 | பார்வைகள் : 102


எஸ்.ஐ.ஆர்., பணி சுணக்கமாக இருப்பதற்கு தி.மு.க., அரசின் தலையீடே காரணம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சேலம் விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர் பெயர்கள் உள்ளன. கடந்த 21 ஆண்டாக, எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளாததால், ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், தவறாக இடம் பெற்றுள்ளனர்.

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., பணி, சுணக்கமாக உள்ளது. இதற்கு, தி.மு.க., அரசின் தலையீடே காரணம். சென்னையில், 4ம் வகுப்பு படித்தவர்கள், பி.எல்.ஓ., பணியை மேற்கொள்கின்றனர். இது குறித்து தெரிவித்தும், அவர்கள் மாற்றப்படவில்லை.

வேண்டுமென்றே திட்டமிட்டு, எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கக்கூடாது என செயல்படுகின்றனர். இதற்காக, தி.மு.க., அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகுதியான, பி.எல்.ஓ., நியமிக்காததால், குழப்பம் ஏற்படுகிறது.

இடைப்பாடி தொகுதியில் மட்டும், இறந்த 5,600 பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளது. சென்னையில் பல தொகுதிகளில், பல ஆயிரம் போலி வாக்காளர்கள் இருந்ததால், நீதிமன்றம் சென்றோம். கரூரில், 10,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர்., பணி முடிந்தால் உண்மையான வாக்காளர்கள் மட்டும் பட்டியலில் இடம் பெறுவர்.

தி.மு.க., கள்ள ஓட்டு போட முடியாது. அதனால் தான், எஸ்.ஐ.ஆர்., பணியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என நினைக்கின்றனர். எஸ்.ஐ.ஆர்., வாயிலாக எப்படி சதி செய்ய முடியும்? உண்மையான வாக்காளர்கள் மட்டுமே ஓட்டுப்போட முடியும்.

நானுாறு கோடி ரூபாய் மின்மாற்றி தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி பேச முடியாது. மின் துறையில், 30,000 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது; நீதிமன்றம் செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'வில்லா' வீடு கட்டுவது குறித்து கேட்டபோது, 'அது குறித்த முழு விபரம் தெரியாது' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்