லடாக் வன்முறையில் 4 பேர் பலி… ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

25 புரட்டாசி 2025 வியாழன் 05:46 | பார்வைகள் : 135
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆக., 5ல் மத்திய பாஜ அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதனிடையே, லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், போலீசார் வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும், லேவில் உள்ள பாஜ அலுவலகத்திற்கும் நெருப்பு வைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலையச் செய்தனர்.இந்த வன்முறையில் இதுவரையில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.