Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்; திருவாரூர் பிரசாரத்தில் விஜய் குற்றச்சாட்டு!

நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்; திருவாரூர் பிரசாரத்தில் விஜய் குற்றச்சாட்டு!

21 புரட்டாசி 2025 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 3377


டெல்டா விவசாயிகளிடம், நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் கமிஷன் அடிக்கும் கொடுமை நடக்கிறது,'' என்று திருவாரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் விஜய் பேசினார்.

இன்று சனிக்கிழமை காலை நாகையில் பிரசாரம் செய்த தவெக தலைவர் நடிகர் விஜய், இரவு திருவாரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட்டியது நான் தான் என்று மார் தட்டிக் கொண்டவரின் மகன் இப்போது முதல்வராக இருக்கிறார். அவர் என்ன செய்கிறார்?

நன்றாக ஓட வேண்டிய தமிழகம் என்ற தேரை நாலா பக்கமும் கட்டையை போட்டு ஆடாமல் அசையாமல் அப்படியே நிறுத்தி விட்டார். இதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்கிறார்.

திருவாரூர் சொந்த மாவட்டம் என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால், திருவாரூர் கருவாடாக காய்கிறது. அதை கண்டுகொள்வதே இல்லை.

அப்பா பெயரில் பேனா வைக்க சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீங்க. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லையே!

அதிகமாக குடிசைப்பகுதி இருக்கும் ஊர் திருவாரூர். இங்கே இருக்கும் மருத்துவக் கல்லுாரிக்கே வைத்தியம் பார்க்கும் நிலை இருக்கிறது. எல்லா கருவிகளும் வேலை செய்கிறதா, இல்லையே!

திருவாரூர் ஒரு மாவட்டத்துக்கு தலைநகர். இங்கு சாலை வசதிகள் கூட சரியாக இல்லை. இந்த மாவட்டத்துல மந்திரி ஒருத்தர் இருக்கிறார். அவரது வேலை என்ன தெரியுமா, சி.எம்., குடும்பத்துக்கு சேவை செய்வது தான் அவரது வேலை. மக்கள் தான் முக்கியம் என்று அவருக்கு நாம் புரிய வைக்கணும்.

டெல்டா விவசாயிகள் கொடுமை ஒன்றை அனுபவிக்கின்றனர். நெல் ஏற்றி இறக்குவதற்கு ஒரு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகின்றனர்.

அரசு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் தருகின்றனர். அத்துடன், ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். நான்கரை ஆண்டில் பல கோடி ரூபாய் டெல்டா பகுதி விவசாயிகளிடம் இருந்து பிடுங்கியுள்ளனர்.

இதை மற்றவர்கள் சொன்னால் நம்ப மாட்டேன். ஆனால் சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். இது உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறது முதல்வர் அவர்களே!

உங்களுக்கு 40க்கு 40 என்றால் தேர்தல் முடிவாக இருக்கலாம். டெல்டா விவசாயிகளுக்கு 40 என்றால் வயிற்றில் அடித்து நீங்கள் வாங்கிய கமிஷன் தான் நினைவுக்கு வரும். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

எங்கள் கொள்கை, ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி, மனசாட்சியுள்ள மக்கள் ஆட்சி. வெற்றி நிச்சயம்.இவ்வாறு விஜய் பேசினார். கூட்டத்தில் பேசிய விஜய், பச்சைத்துண்டு அணிந்திருந்தார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்