லண்டன் பூங்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு

18 புரட்டாசி 2025 வியாழன் 13:12 | பார்வைகள் : 191
லண்டன் பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் ஹாக்னி(Hackney) பகுதியில் அமைந்துள்ள கிளிசோல்ட் பூங்காவில்(Clissold Park) புதன்கிழமை மாலை திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாலை 7.06 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை கண்டுபிடித்தனர்.
இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 40 வயதுடைய ஆண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். காயமடைந்த பெண்ணின் உடல் நிலை குறித்த எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.
சம்பவ இடத்தை சுற்றி தேடல் மற்றும் விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கண்டெடுத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் கிடைக்கும் ஆதாரங்களை மஞ்சள் நிற அடையாள குச்சிகளை பயன்படுத்தி பதிவு செய்து வருகின்றனர்.