காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியை அறிவித்த ஜேர்மனி

13 ஐப்பசி 2025 திங்கள் 05:31 | பார்வைகள் : 104
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 29 மில்லியன் யூரோ நிதியை ஜேர்மனி அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க ஜேர்மன் அரசு 29 மில்லியன் யூரோ நிதியுதவியை அறிவித்துள்ளது.
ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தனது X பக்கத்தில், "எகிப்துடன் இணைந்து காசா மறுசீரமைப்பு மாநாட்டை நடத்த உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிதி உதவி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையில், உருவாக்கப்பட்ட சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
2023 அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியத்திலிருந்து தொடங்கிய போரில், காசா பகுதியில் 67,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சமாதான ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் 48 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசாவுக்கு தினமும் 600 உதவி லொறிகள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்து 400 லொறிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளது. உணவு, மருந்துகள், கூடாரங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்நிலையில், காசா மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால், பெரும்பாலான வீடுகள் இடிந்த நிலையில் உள்ளன.
ஹமாஸ் நிர்வாகம், நகர சாலைகளை சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. சமாதானம் ஏற்பட்டாலும், நிலைமை மிகவும் நுணுக்கமானதாகவே உள்ளது.