Paristamil Navigation Paristamil advert login

பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!

பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!

7 ஐப்பசி 2025 செவ்வாய் 07:31 | பார்வைகள் : 151


அக்டோபர் 9ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்க போவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பீஹாருக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதால் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. வேட்பாளர்கள் தேர்வு, பிரசார திட்டங்கள் என பீஹாரில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி இருக்கிறது.

இந் நிலையில், தமது கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யார்? அவர்கள் களம் காணும் தொகுதிகள் ஆகியவற்றை அக்.9ம் தேதி அறிவிக்க போவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

அக்டோபர் 9ம் தேதி கட்சி தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இம்முறை உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் நிச்சயம் உள்ளது.

நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது அக்.9ம் தேதி தெரிய வரும். தேர்தலில் எனது கட்சி கிட்டத்தட்ட 28 சதவீதம் ஓட்டுகளை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த தேர்தலில் தேஜ கூட்டணியும், இண்டி கூட்டணியும் பெற்ற ஓட்டு சதவீதம் என்பது 72 சதவீதம் மட்டுமே. பாக்கி உள்ள 28 சதவீதம் ஓட்டுகளும் இம்முறை எங்களுக்குத்தான். இது தவிர, கடந்த முறை தேஜ கூட்டணி மற்றும் இண்டி கூட்டணிக்கு ஓட்டு போட்டவர்களில் தலா 10 சதவீதம் ஓட்டுகள் எங்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என்று மக்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்த கணக்கின்படி பார்த்தால் தேர்தலில் எங்களுக்கு இம்முறை 48 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நான் மிகவும் உறுதியுடன் கூறுகிறேன்… நிதிஷ்குமாருக்கு இதுதான் கடைசி தேர்தல். மகர சங்கராந்தியை மாநில தலைநகரில் உள்ள அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தில் அவரால் கொண்டாட முடியாது.

இம்முறை பீஹார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுத காத்திருக்கின்றனர். மாநிலத்தின் எதிர்கால நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக மக்கள் ஓட்டு போட இருக்கின்றனர்.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்