Paristamil Navigation Paristamil advert login

‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கை

‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கை

23 ஆவணி 2025 சனி 15:49 | பார்வைகள் : 112


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் என ஏதோவொன்றுக்குள் சிக்கி வருகின்றது.

 

ஒரு சிக்கலுக்குள் இருந்து விடுபடுவதற்குள் இன்னொரு சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பிரசாரங்களுக்கும் நன்றாகத் தீனி கொடுப்பதே அரசின் நிலையாகவுள்ளது.

 

அனுரகுமார அரசு ஆட்சி அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம், அரிசி, தேங்காய், குரங்கு, உப்பு, பாதாள உலகம், படுகொலைகள், சர்வாதிகாரம், இந்தியப் பிரதமரின் வருகை, ஜனாதிபதியின் இந்திய, சீன விஜயங்கள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி, மின்சாரக் கட்டணம், வடக்கு காணி சுவீகரிப்பு, 323 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிப்பு,இஸ்‌ரேலுக்கான அனுமதிகள், கல்வி மறு சீரமைப்பு என பல சர்ச்சைகளில் சிக்கி இவற்றிலிருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது ‘கஞ்சா’ சர்ச்சையில் சிக்கியுள்ளது.

 

இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக ‘கஞ்சா’ பயிரிடுவதற்கான சட்ட பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன வெளியிட்டுள்ளதன் மூலமே ‘மாற்றம்’ அரசு தற்போது ‘கஞ்சா’ அரசாக மாறி கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

 

இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக கஞ்சா (பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இலங்கை முதலீட்டு சபையின் கீழ், செயல்படுத்தப்படவுள்ளது.

 

மொத்தம் 37 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் இருந்து ஏழு முதலீட்டாளர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை முதலீட்டு சபை அவர்களுக்கு உரிய சட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

 

முதல் கட்டமாக ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஆறு மாதங்களுக்குத் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நடைபெறும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, உரிமம் நீட்டிக்கப்படுமா என்பதைக் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும்.

 

ஒவ்வொரு முதலீட்டாளரும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை இலங்கை மத்திய வங்கியில் உத்தரவாதமாக வைப்பிலிட வேண்டும். பயிர்ச்செய்கைத் திட்டத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு தேவை.

 

கஞ்சா பயிரிடப்படும் அனைத்து உற்பத்திகளும் முழுமையாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். நாட்டிற்குள் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது. ஏற்றுமதி நோக்கங்கள் மருந்து உற்பத்தி மற்றும் சோதனைக்காக மட்டுமே.

 

பயிரிடும் பகுதி பாதுகாப்பான வேலியால் சூழப்பட்டிருக்க வேண்டும். விதைகள், இலைகள், வேர்கள் உள்ளிட்ட எந்தப் பகுதியும் வெளிப்புற சூழலுக்குள் வெளியேறக் கூடாது.

 

வளாகத்தில் சிறப்பு பணிக்குழு மற்றும் பொலிஸ் பாதுகாப்பு கட்டாயம். நில ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு, இலங்கை முதலீட்டு சபையின் கீழ் மீரிகம பகுதியில் 64 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தின் நடைமுறையை இலங்கை முதலீட்டு சபை, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களம் இணைந்து மேற்பார்வையிடுகின்றன.

 

இந்த முயற்சியின் மூலம் இலங்கைக்கு கணிசமான அந்நியச்

செலாவணி வருவாய் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறான இலங்கையில் கஞ்சா பயிரிடும் திட்டத்தை அனுரகுமார அரசு முதன்முதலில் கொண்டுவந்திருந்தால் கூட அது பெரியளவிலான சர்ச்சைகளை, விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்காது.

 

ஆனால், கடந்த அரசில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த டயனா கமகே இந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஒரு யோசனையாக முன்வைத்தபோது,

 

அதனை வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமாரவும் பிரதமரான ஹரிணி அமரசூரியவும் அமைச்சரான விஜித ஹேரத்தும் கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி அமைச்சரான டயனா கமகே இந்த யோசனையை 2021ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் முன்வைத்தார். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சா செய்கை ஊடாக, பாரிய இலாபத்தை பெற்று வருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

 

எனினும், கஞ்சா ஏற்றுமதிக்கான பயிர் செய்கையை மேற்கொள்வது சட்டமாக்கப்படுகின்றமை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்த நிலையில், அனுரகுமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதனை கடுமையாக எதிர்த்தது.

 

இலங்கையில் கஞ்சா தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், நாட்டிற்குள் இன்றும் கஞ்சா பயன்பாடு காணப்படுவதாகவும் இந்த நிலையில், கஞ்சா செய்கையை அனுமதித்து சட்டமாக்கும் பட்சத்தில், அது நாட்டிற்குள் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது எனவும் கஞ்சா ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தற்போது கோரப்பட்டாலும், எதிர்காலத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் அனுமதி கோரப்படும் சாத்தியம் உள்ளது எனவும் இவர்கள் எதிர்த்து வாதிட்டனர்.

 

கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என்பதுடன், கஞ்சா என்பது தலைசிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், பல நாடுகள் கஞ்சா செய்கை செய்து வருகின்றன.

 

அத்துடன், பல நாடுகள் கஞ்சாவை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, மருந்து வகைகளுக்கும் கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றன. கஞ்சாவிற்கான கேள்வி, நாளுக்கு நாள் அதிகரிக்கும் உலகில் நோய்கள் என்றுமே குறையாது . அதனால், மருத்துவ குணம் கொண்ட இவ்வாறான மூலிகைகள் அத்தியாவசியமானவை.

 

எதிர்வரும் காலப் பகுதியில் பில்லியன் கணக்கான பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு ஏற்றுமதி பயிர் செய்கை கஞ்சா. நாடு இன்று பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து யோசிக்க வேண்டும்.

 

இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் கிடையாது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய, செய்கை முறையிலான கேரளா கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 

கஞ்சா என்பது இலங்கையின் கலாசாரத்துடன் இணைந்த ஒன்று. கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டிற்கு பாரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும், கஞ்சாவின் ஊடாக பெரும்பாலான முக்கிய பொருட்களைத் தயாரிக்க முடியும். அழகு சாதன பொருட்கள், மருத்துவ வகைள் என பல்வேறு பொருட்களைத் தயாரிக்க முடியும் எனவும் டயானா கமகே தெரிவித்திருந்தார்.

 

ஆனால், அப்போது டயனா கமகேயை மிக மோசமாக, தரக்குறைவாக, அவரின் நடத்தை தொடர்பில் கூட, விமர்சித்தவர்கள்தான் தற்போது அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த ‘கஞ்சா பயிர் செய்கை’ திட்டத்திற்கு தமது அரசில்

அனுமதி வழங்கி அதனை நியாயப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா செய்கை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட திட்டம்.

 

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கஞ்சா பயிர்ச் செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டம். இந்த திட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சியினரும் ஆதரவு வழங்கியிருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தனர், இந்த திட்டத்தின் ஆபத்தான விடயங்களை அப்போது அவர்கள் எதிர்த்தனர்.

 

தற்பொழுது அந்த ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டு கஞ்சா செய்கையில் ஈடுபடவுள்ளது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கின்றார்.

 

‘புதிய திசை’, ‘மாற்றம்’ என்ற கோஷத்தோடு ஆட்சி பீடம் ஏறிய அனுரகுமார அரசு, எந்த புதிய திசையிலும் பயணிக்க வில்லை. எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பழைய திசையிலேயே தொடர்ந்தும் பயணிப்பதுடன், பழைய அரசுகள் கொண்டுவந்த போது தங்களினால் கடுமையாக எதிர்க்கப்பட்ட திட்டங்களையே அப்படியே ‘கொப்பியடித்து’ தமது திட்டங்களாக்கி அதனை நியாயப்படுத்தி நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

 

இதுவே சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் முதல் தற்போதைய ‘கஞ்சா பயிர் செய்கை’ வரை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, ‘மாற்றம்’ என்பது அனுரகுமார அரசின் வார்த்தையாகவே மட்டும் உள்ள நிலையில் ‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கையாக மாறிப்போயுள்ளது.

 

அதாவது நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தமது கொள்கையிலிருந்து, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து அனுரகுமார அரசுதான் ‘மாற்றம்’ கண்டுள்ளது.

 

நன்றி tamilmirror

 

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்