Paristamil Navigation Paristamil advert login

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

13 புரட்டாசி 2025 சனி 16:49 | பார்வைகள் : 191


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011ம் ஆண்டு காவல் துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் மீது 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, கடந்த பிப்., 21ல் உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு மீது, கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அமர்ந்து பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது.

கூடவே, அடுத்த விசாரணை நடைபெறும் வரை, சீமான் மீதான வழக்கு விசாரணைக்குஇடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் செட்டில்மென்டுக்கு தயார் என, உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார் சீமான்.

'ஆனால், செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில், 'செட்டில்மென்ட் தருவதாக நான் எங்கும் தெரிவிக்கவில்லை' என கூறியிருக்கிறார்.

'மேலும், பாதிக்கப்பட்ட நபரை பாலியல் தொழிலாளி என கேவலமாக விமர்சித்து இருக்கிறார்,' என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, ''சீமானால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் நடிகை, சீமானை ஏற்கனவே புகழ்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

ஆக, இருவரும் மாறி மாறி பேசுவது தெரிகிறது. இருவரும் குழந்தைகள் கிடையாது,'' என கோபமாக கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், 'பாதிக்கப்பட்ட பெண் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, திருமணம் செய்து கொள்வதாக சீமான் உறுதியளித்திருந்தார்; அந்த அடிப்படையிலேயே இருவரும் இணைந்து வாழ்ந்தனர்.

'பின், வேறொரு பெண்ணை திருமணம் செய்து, புகார் அளித்திருக்கும் நடிகையை திருமணம் செய்யாமல் ஏமாற்றி உள்ளார்.

'திருமணம் செய்யாமல் வாழ்ந்த காலத்தில், தொடர்ச்சியாக வன்புணர்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தான், சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

'இப்போதும் கூட, நடிகை விஜயலட்சுமியை அவதுாறாக பேசி வருகிறார். இதற்காக சீமான், விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கோர வேண்டும்; அவதுாறாக பேசுவதை நிறுத்த வேண்டும். அதற்காக கூடுதலாக மனு தாக்கல் செய்யவும் தயாராக இருக்கிறோம்' என தெரிவித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'சீமான், விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சீமான் கோரிக்கை ஏற்க முடியாமல் போகலாம்' என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்