Paristamil Navigation Paristamil advert login

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இந்தியா அமெரிக்கா திருப்தி: கோயல்

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இந்தியா அமெரிக்கா திருப்தி: கோயல்

12 புரட்டாசி 2025 வெள்ளி 05:05 | பார்வைகள் : 101


இந்தியா - அமெரிக்கா இடையில் நடந்து வரும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையான சூழ்நிலையில் நடந்து வருவதாகவும், இதில் இரு நாடுகளும் திருப்தி அடைந்துள்ளதாகவும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 5 சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ளன. அதில், விவசாயம், பால் மற்றும் பண்ணைத்துறைகளில் சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.

ஆனால், விவசாயிகளை பாதிக்கும் என்பதால், அதனை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் நலன்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்ததால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க குழுவினர் இந்தியா வரவில்லை.


இதனிடையே டிரம்ப் நேற்று வெளியிட்ட சமூக வலைதளத்பதிவில் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சு நடத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மோடியுடன் விரைவில் பேச உள்ளேன். இரு நாடுகளும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து இருந்த பிரதமர் மோடி, வர்த்தகப் பேச்சுகள் இந்தியா- - அமெரிக்கா உறவின் எல்லையற்ற திறன்களை பயன்படுத்த வழிவகுக்கும். 'இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் டிரம்புடன் பேசுவதை நானும் எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது; கடந்த மார்ச் மாதம் முதல், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையில் நேர்மறையான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் இரு நாடுகளும் திருப்தி அடைந்தள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு

மேலும் அவர், நமது அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு பரிதவிக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்

வர்த்தக‌ விளம்பரங்கள்