Paristamil Navigation Paristamil advert login

நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும்... மனித உரிமைகள் சட்டத்தரணிகள் போராட்டம்

நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும்... மனித உரிமைகள் சட்டத்தரணிகள் போராட்டம்

30 ஆவணி 2025 சனி 09:47 | பார்வைகள் : 4004


இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்யக் கோரி அர்ஜென்டினாவின் ஃபெடரல் நீதிமன்றங்களில் குற்றவியல் புகார் அளித்துள்ளதாக மனித உரிமை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

 

செப்டம்பர் மாதம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அர்ஜென்டினாவிற்கு பயணப்படுவதாக வெளியான தகவலை அடுத்தே, மனித உரிமைகள் சட்டத்தரணிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

 

ஆனால், நெதன்யாகுவின் பயணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அர்ஜென்டினா ஃபெடரல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் புகாரில், நெதன்யாகுவை அந்த நாட்டில் கைது செய்ய வேண்டும் என்றும்,

 

 

மார்ச் 23 அன்று 15 பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவத்திற்காக இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

 

இஸ்ரேலிய நிர்வாகத்தால் தூக்கிலிடப்பட்டவர்களில் பலர் இக்கட்டான சூழலில் உதவும் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றே மதிப்பாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனிடையே, செய்தி ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், நெதன்யாகு செப்டம்பர் மாதம் அர்ஜென்டினாவுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அரசாங்கம் இந்த விஜயத்தை உறுதிப்படுத்தவில்லை.

 

இந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக நியூயார்க்கில் இரு தலைவர்களும் பங்கெடுக்கும்போது, ​​நெதன்யாகு அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயுடன் ஒரு சந்திப்பைக் கோரலாம் என்று அர்ஜென்டினா செய்தித்தாள் கிளாரின் செய்தி வெளியிட்டுள்ளது.

 

அர்ஜென்டினாவின் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் ரோடோல்போ யான்சன் மற்றும் ராஜி சௌரானி பதிவு செய்துள்ள புகாரில், திட்டமிட்டே பட்டினியால் மரணத்தை ஏற்படுத்திய போர்க்குற்றம்; கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இணை குற்றவாளியாக நெதன்யாகு குற்றவியல் ரீதியாக பொறுப்பேற்கிறார் என்பது வெளியான தகவல்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

 

அரசுத் தொழிலாளர்கள் சங்கம் (ATE) மற்றும் மனித உரிமைகள் குழுவான HIJOS ஆகியவற்றால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அர்ஜென்டினா ஃபெடரல் நீதிமன்றங்களில் நெதன்யாகுவுக்கு எதிராக ஏற்கனவே கைது ஆணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதுடன், பெரும்பாலான மக்களை இடம்பெயர செய்து ஆபத்தில் சிக்க வைத்த கொடூர செயல்களுக்காக நெதன்யாகு உலகளாவிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

 

உலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது, அதே நேரத்தில் காஸாவில் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனித்தனியாக நெதன்யாகுவுக்கு கைது ஆணை பிறப்பித்துள்ளது.

 

இஸ்ரேலும் நெதன்யாகுவும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், அமெரிக்க ஆதரவு காரணமாக அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.

 

 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026