அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்
23 ஆடி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 1306
அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில், இந்தியரான 23 வயதான சரண்ப்ரீத் சிங் வசித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு 9.22 மணியளவில், தனது மனைவியுடன் கின்டோர் அவென்யூ அருகே உள்ள அலங்கார மின்விளக்குகளை பார்வையிட சென்றார்.
அப்போது காரை நிறுத்தி விட்டு, இறங்கிய போது மற்றொரு காரில் வந்து இறங்கிய 5 நபர்கள், அவரை இந்தியர் என்று தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி, கூர்மையான ஆயுதங்களை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ராயல் அடிலெய்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரண்ப்ரீத் சிங்குக்கு மூளை அதிர்ச்சி, முகத்தில் பல எலும்பு முறிவுகள், மூக்கு உடைப்பு மற்றும் கடுமையான கண் காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி, என்ஃபீல்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய மற்றவர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு, காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தெற்கு அவுஸ்திரேலியா பிரீமியர் பீட்டர் மாலினாஸ்காஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதே போல், அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் உள்ள டல்லாஹ்ட் புறநகர்ப் பகுதியில், ஜூலை 19 ஆம் திகதி மாலை 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த கும்பல் ஒன்று, அவர் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி, இந்தியரின் ஆடைகளை களைந்து சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கிருந்த பொதுமக்கள், அந்த இந்தியரை அவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தாக்கப்பட்ட இந்தியர் 3 வாரங்களுக்கு முன்புதான் அயர்லாந்து சென்றுள்ளார். மேலும், அவரை தாக்கிய கும்பல் ஏற்கனவே டல்லாட் பகுதியில் இதே போல் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அயர்லாந்திற்கான இந்தியத் தூதர் அகிலேஷ் மிஸ்ரா, "பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு மற்றும் உதவி அளித்த அயர்லாந்து மக்கள் மற்றும் பொலிசாருக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த குற்ற செயலில் ஈடுப்பட்ட குற்றவாளி நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
டல்லாட் தெற்கிற்கான கவுன்சிலரான பேபி பெரெப்படன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரை நேரில் சந்தித்துள்ளார்.
அதன் பின்னர் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட நபர் அதிர்ச்சியில் இருந்ததால் அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவர் 3 வாரங்களுக்கு முன்புதான் அயர்லாந்திற்கு வந்தார். தற்போது அவர் யாரையும் சந்திக்கவில்லை.
டல்லாட்டில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்தப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க அழைப்பு விடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan