Paristamil Navigation Paristamil advert login

ஒரு வீடு கட்டினாலும் கார் நிறுத்துமிடம் கட்டாயம்; விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை

ஒரு வீடு கட்டினாலும் கார் நிறுத்துமிடம் கட்டாயம்; விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை

22 ஆடி 2025 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 174


தனியாக ஒரு வீடு கட்டினாலும், அதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதியை உறுதி செய்யும் வகையில், விதிகளை கடுமையாக்கும் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை துவக்கி உள்ளது.

தமிழகத்தில், பொது கட்டட விதிகள் அடிப்படையில், கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அலுவலக வளாகங்கள் ஆகியவற்றில் வாகன நிறுத்துமிடங்களை உறுதி செய்ய, கட்டுப்பாடுகள் உள்ளன.

இதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு 750 சதுர அடிக்கும், ஒரு கார் நிறுத்துமிடம், இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இருக்க வேண்டும். இதற்கு ஏற்றபடி இடத்தை ஒதுக்குவதுடன், அதை வரைபடத்தில் குறிப்பிட்டால் மட்டுமே, திட்ட அனுமதி கிடைக்கும்.

இருப்பினும், பெரும்பாலான இடங்களில், 700 சதுர அடி, அதற்கு குறைவான பரப்பளவுள்ள வீடுகளுக்கு, வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால், ஒரு படுக்கை அறை வீடு வாங்குவோர், தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாது, ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் அளவுக்கு தனி வீடு கட்டுவோர் பலரும், நிலம் முழுவதையும் பயன்படுத்தி, கட்டுமானப் பணி மேற்கொள்கின்றனர். இதனால், இவர்கள் வாகன நிறுத்துமிடம் ஒதுக்குவது இல்லை.

வரைபட அனுமதி நிலையிலும், அதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதனால், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில், கார்கள், இரு சக்கர வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, வீடுகளில் கார் வாகனம் நிறுத்தத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'தனி வீடுகளில் வாகன நிறுத்துமிடங்களை உறுதி செய்யும் வகையில், புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்' என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு குடும்பம் வசிப்பதற்கான தனி வீடுகளில், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியை உறுதி செய்ய, கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட உள்ளன. மனையின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு, சாலையின் அகலம் அடிப்படையில், இதற்கான கட்டுப்பாடுகள் வகுக்கப்பட உள்ளன.

குறிப்பிட்ட சில இடங்களில், மனையின் பரப்பளவு குறைவாக இருக்கும் நிலையில், அதில் வீடு கட்டுவோர், வேறு இடத்தில் வாகனத்தை நிறுத்தும் இடத்தை காட்ட வேண்டும். அதே நேரத்தில் தரைதளம் முழுவதையும் வாகன நிறுத்துமிடமாக விடுவோர், அந்த இடத்தை வெளியாட்கள் வாகனம் நிறுத்த வாடகைக்கு விடலாம் என்பது போன்ற விதிகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்