தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

18 ஆவணி 2025 திங்கள் 05:48 | பார்வைகள் : 107
தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வும் செய்யும் தேர்தல் செப். 9ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலில் பார்லிமென்டின் இரு அவைகளின் (லோக் சபா, ராஜ்ய சபா) எம்பிக்கள் (782 பேர்), துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். வேட்பாளராக போட்டியிடுபவர் ஓட்டளிக்க முடியாது.
தேர்தலில் பாஜ கூட்டணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.17) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு, தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜ தலைவர் நட்டா அறிவித்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் வரலாறு
சி.பி. ராதாகிருஷ்ணன் (சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்) 1957ம் ஆண்டு அக்.20ல் திருப்பூரில் பிறந்தார். வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். 16 வயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தில் இருந்தவர். ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக செயலாற்றியவர். 1998 மற்றும் 1999ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் பாஜ சார்பில் கோவை தொகுதியில் இருந்து இரு முறை லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். எம்.பி.யாக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவராகப் பணியாற்றினார்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான பார்லிமென்ட் குழு (பி.எஸ்.யு) மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் பார்லிமென்ட் சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு ஐநா சபைக்கான பார்லிமென்ட் குழுவில் இடம் பெற்றவர். 2003ம் ஆண்டு அக்.20ல் ஐநா பொதுச்சபையின் 58வது அமர்வில் உரையாற்றிய சிறப்பு பெற்றவர். பின்னர் 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தமிழக பாஜ தலைவராக பொறுப்பு வகித்தவர்.
அப்போது 93 நாட்கள் அவர் மேற்கெண்ட 19,000 கிமீ ரதயாத்திரை பயணம் பிரபலம்.
அனைத்து இந்திய நதிகளையும் இணைப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, தீண்டாமையை நீக்குவது மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவது போன்றவற்றை முன்னிலைப்படுத்தி இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய செயலாளராகவும் திறம்பட செயலாற்றியவர். 2014ல் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தைவானுக்கு சென்ற முதல் பார்லிமென்ட் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் வரும் அகில இந்திய கயிறு வாரிய தலைவராக இருந்தார். அவரது தலைமையின் கீழ் இந்தியாவில் இருந்து கயிறு ஏற்றுமதி ரூ. 2532 கோடியாக உயர்ந்தது. 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, அவர் கேரளாவிற்கான பாஜவின் அகில இந்தியப் பொறுப்பாளராக இருந்தார். பிப்.12ம் தேதி 2023ம் ஆண்டு ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தார். மார்ச் 19, 2024ல் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவிகள் கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டன. பிப்.18ல் 2023ம் ஆண்டு ஜார்க்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார். தனது முதல் நான்கு மாதங்களுக்குள், ஜார்க்கண்டின் 24 மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, மக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். தற்போது மஹாராஷ்டிரா கவர்னராக பதவி வகித்து வருகிறார்.