சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

15 ஆவணி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 134
சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
வாழ்த்து தெரிவித்தார் முதல்வர்
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். மதவெறி நிராகரிப்பு, பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல், மக்களை பாதுகாப்பது தான் உண்மையான சுதந்திரம்'' என குறிப்பிட்டுள்ளார்.