பெரிய அளவிலான இணையத் தாக்குதலுக்கு இலக்கான அருங்காட்சியகம்!

12 ஆவணி 2025 செவ்வாய் 16:57 | பார்வைகள் : 1430
பரிசின் 5வது வட்டாரத்தில் அமைந்துள்ள பிரான்ஸ் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Museum national d'Histoire naturelle) பல வாரங்களாகத் தொடர்ந்து இணையத் தாக்குதலால் (CYBERATTAQUE) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அருங்காட்சியகத் தலைவர் ஜில் பிளோக் (Gilles Bloch) அளித்த செவ்வியில், ஜூலை இறுதியில் La Tribune வெளியிட்ட தகவலை உறுதி செய்து, “இது ஒரு மிகப்பெரிய தாக்குதல். சில தரவுகள் திருடப்பட்டிருக்கலாம். இணைய குற்றவாளிகளின் முக்கிய நோக்கம், தரவுகளைப் பெற்றுக்கொண்டு, அதை வாணிப நோக்கங்களில் பயன்படுத்துவதே” என தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் முழு அளவு இன்னும் துல்லியமாக மதிப்பிடப்படவில்லை. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக அருங்காட்சியகத்தின் வலைப்பின்னலின் ஒரு பகுதியும், சில இணையதளங்கள் மற்றும் சேவைகளும் செயலிழந்துள்ளன. இதன் விளைவாக, ஆராய்ச்சி, நிபுணத்துவப் பணிகள், நூலகப் பயன்பாடு மற்றும் சேகரிப்புகள் தொடர்பான இணைய கருவிகள் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்களுக்கு தற்போது அணுக முடியாத நிலையிலுள்ளன.
எனினும், பார்வையாளர்களுக்கான இடங்கள் பாதிக்கப்படவில்லை. “காட்சிக் கூடங்கள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் வழக்கம்போல திறந்திருக்கும்” என்று ஜில் பிளோக் உறுதியளித்தார்.
மேலும், இந்த இணையத் தாக்குதலுக்கு எதிராக, அருங்காட்சியகம் எந்தத் தொகையும் குற்றவாளிகளுக்கு வழங்கமாட்டோம் எனவும், இது பிரான்ஸ் அரசின் மற்றும் பொது நிர்வாகங்களின் கொள்கைக்கேற்ப எடுக்கப்பட்ட முடிவாகும் எனவும் அறிவித்துள்ளது.