கத்தியுடன் மிரட்டிய அப்பா: காவல்துறையை அழைத்த 13 வயது மகன்!!
.jpg)
2 ஆவணி 2025 சனி 15:50 | பார்வைகள் : 2149
ஓய்ஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற 48 வயதுடைய ஒருவரை, தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் நீண்ட நாட்களாக சொற்கள் மற்றும் உடல் வன்முறைகளால் பாதித்ததற்காக போவெ Beauvais (Oise) நீதிமன்றம் விசாரித்தது.
2025 ஏப்ரலில் வேலை இழந்த பிறகு, அவர் அதிகமாக மதுபானம் அருந்தத் தொடங்கியுள்ளார். அதன் விளைவாக, குடும்பத்தில் வார்த்தை வன்முறையும், துப்புதல் உள்ளிட்ட தாக்குதல்களையும் ஏற்படுத்தி வந்துள்ளார்.
இது உச்ச கட்டத்தை எட்டியது ஜூலை 2ஆம் திகதி, அவர் தனது 13 வயது மகனை கத்தியுடன் மிரட்டியபோது. மகன் 17 என்ற எண்களில் காவல்துறையுடன் தொடர்பு கொண்டு தற்காத்துக் கொண்டான்.
நீதிமன்றத்தில் ஸ்டீபன் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். அவரது மனைவி, தண்டனை கிடைக்க வேண்டாம் என்றும் அவர் சிகிச்சை பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
குழந்தைகள் "குடிக்கிற அப்பா" மற்றும் "குடிக்காத அப்பா" என்று வேறுபடுத்தி கூறியுள்ளனர். ஸ்டீபன் தற்போது குடியையும் புகைத்தலையும் விட்டுவிட்டதாகவும், சிகிச்சை ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறை தண்டனையும், சிகிச்சை மற்றும் வேலை செய்வதற்கான கட்டாய நிபந்தனைகளுடன் தண்டனை வழங்கியுள்ளது.