காஸாமீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 68 பேர் பலி

30 ஆனி 2025 திங்கள் 20:00 | பார்வைகள் : 207
காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாக நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் பலஸ்தீன மக்கள் 68 பேர் கொல்லப்பட்டனர்.
காஸாவில் நேற்று (29) சுமார் 50-க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியதாக காஸா அமைச்சரகம் தெரிவித்துள்ளது. பல்வேறு கட்ட தாக்குதல்களில் காஸா நகரில் 47 பேரும், வடக்கு காஸாவில் 21 பேரும் கொல்லப்பட்டதாக காஸா அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஸாவில் போர் தொடங்கியதுமுதல் இதுவரை கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 56,500-ஐ கடந்துள்ளதோடு சுமார் 1,33,419 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக புதியதொரு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் - ஹமாஸ் இருதரப்பிடமும் மத்தியஸ்தம் செய்து வரும் எகிப்து வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக் 60 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டு அதற்குள் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.