புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் மாத்திரைகள் பற்றி தெரியுமா ?

30 ஆனி 2025 திங்கள் 17:03 | பார்வைகள் : 228
தினமும் ஒரு கையளவு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பலர் நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாப்பதாக நம்பிக்கை கொடுக்கும் பல்வேறு சப்ளிமெண்டுகள் இன்று எளிமையாகவே கிடைக்கிறது. ஆனால் “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து சப்ளிமெண்ட்டுகளும் நமக்கு நன்மை செய்வது கிடையாது. அவற்றில் பல நல்லதை விட அதிக தீங்கை ஏற்படுத்துகின்றன. எனவே சப்ளிமெண்ட்டுகளை சாப்பிடுவதற்கு முன்பு எச்சரிக்கையை கையாளுவது மிகவும் அவசியம். சொல்லப்போனால், சுகாதார வல்லுனர்கள் மக்களை உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுக்கவே ஊக்குவிக்கின்றனரே தவிர, சப்ளிமெண்ட்களில் இருந்து அல்ல. மேலும் அதிக அளவு சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்வது நமக்கே தீங்காகிவிடும்.
சப்ளிமெண்ட்டுகள் சில சமயங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம் அல்லது அதன் சிகிச்சையுடன் குறுக்கிடலாம் என்று புற்றுநோய் உணவு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில் புற்றுநோயை தடுப்பதாக சொல்லப்படும், ஆனால் எச்சரிக்கையை சுமந்து வரும் பிரபலமான 5 சப்ளிமெண்ட்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பீட்டா கரோட்டின் (மற்றும் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்கள்): இந்த பீட்டா கரோட்டின் சப்ளிமெண்ட் புகை பிடிக்கும் நபர்களில் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான அபாயத்தை 16 சதவீதம் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நபர்களில் இது வயிறு புற்றுநோயையும் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் E போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் புற்றுநோய் சிகிச்சையை பலனற்றதாக மாற்றி விடுகின்றன. உண்மையில் பழங்கள் மற்றும் காய்கறிகளிடமிருந்து கிடைக்கும் பீட்டா கரோட்டினை அதிக அளவு சாப்பிடுவதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
வைட்டமின் C: வைட்டமின் C சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்வது புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுவதாக பிரபலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் இதனை அதிக அளவு எடுத்துக் கொள்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கிமோதெரபி சிகிச்சையில் தலையிடலாம். எனவே வைட்டமின் C ஊட்டச்சத்தை பொருத்தவரை அதனை உணவுகளில் இருந்து எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறதே தவிர மாத்திரைகள் மூலமாக அல்ல. இந்த வைட்டமின் C என்பது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது. உணவு மூலமாக போதுமான அளவு வைட்டமின் C எடுத்துக் கொள்ளும் போது அதனால் மார்பக புற்றுநோய், சர்விக்கல், என்டோமெட்ரியல், ஈசோபேஜியல், நுரையீரல், கணைய புற்றுநோய் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறையும்.
வைட்டமின் E: வைட்டமின் E எடுத்துக் கொள்ளும் நபர்கள் இடையே ப்ராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 17 சதவீதம் அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் வைட்டமின் E சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை இல்லை. அதிக அளவு வைட்டமின் E எடுத்துக் கொள்வது கிமோதெரபி சிகிச்சையில் தலையிடலாம்.
செலினியம்: அதிக அளவு செலினியம் எடுத்துக் கொள்வதால் ப்ராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது. செலினியம் குறைபாடு இருப்பது தெரிய வந்தால் மட்டுமே ஒருவர் இந்த சப்ளிமெண்ட்டை எடுக்க வேண்டும் என்று இந்த ஆய்வு மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலிக் அமிலம் அல்லது அதிக அளவு ஃபோலேட்: உணவு மூலமாக ஃபோலேட் எடுத்துக் கொள்வது அத்தியாவசியமானது என்றாலும் சப்ளிமெண்ட் வடிவில் ஃபோலிக் அமிலத்தை அதிக அளவு எடுத்துக் கொள்வது ப்ராஸ்டேட் புற்றுநோயை 24 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே போலிக் அமில சப்ளிமெண்ட்களை மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகையால் உணவு மூலங்கள் எப்போதும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. சப்ளிமெண்ட்களில் உண்மையாகவே அபாயங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள் சப்ளிமெண்ட்கள் எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை. உணவுகளில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பயோ-ஆக்டிவ் காம்பவுண்டுகள் கலந்து காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனை சப்ளிமெண்ட்களால் வழங்க இயலாது. உதாரணமாக, சமையலறையில் காணப்படும் மஞ்சள் நமக்கு பயனுள்ளதாக அமைகிறது. ஆனால் அதே சமயத்தில் மஞ்சளில் காணப்படும் குர்குமினை சப்ளிமெண்ட்டுகளாக எடுத்துக் கொள்வது ஹார்மோன் சிகிச்சையில் தலையிடலாம். குறைபாடுக்காக வைட்டமின் D, கர்ப்ப காலத்தில் போலிக் அமிலம் போன்ற மாத்திரைகளை ரத்த பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக் கொள்வது அவசியம்.