கோடையில் கடும் வெப்பம்: 200 அரசு பாடசாலைகள் மூடப்படுகின்றன!

30 ஆனி 2025 திங்கள் 04:00 | பார்வைகள் : 760
ஜூன் 30, திங்கள் அன்று, பிரான்சில் உள்ள 84 மாவட்ங்கள் வெப்ப அச்சுறுத்தலுக்கான 'செம்மஞ்சள் எச்சரிக்கையில்' உள்ளன. இந்த கடும் வெப்பம் புதன்கிழமை வரை தொடரும் என Météo-France தெரிவித்துள்ளது.
200 பாடசாலைகள் மூடப்படும்
'47,790 அரசு ஆரம்பப் பாடசாலைகளில் (முன்கல்வி மற்றும் தொடக்க நிலை) 200 பாடசாலைகள் முழுமையாகவோ, பகுதியளவிலோ மூடப்படும். இது பாடசாலைகளின் 0.4% ஆகும். திங்கள், செவ்வாய், புதன் நாட்களில் பாடசாலைகள் மூடப்படுவது அமுலில் இருக்கும்' என கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
தூர் (tours) நகரம் தங்களின் அனைத்து பாடசாலைகளையும் திங்கள் மற்றும் செவ்வாய் பிற்பகல் மூட முடிவு செய்துள்ளது.
வெப்பத்தை எதிர்கொள்ள அமைச்சர் கூறிய பரிந்துரைகள்:
அதிக வெப்பம் இருக்கும் பாடசாலை அறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
உடற்பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.
மாற்றாகப் பெற்றோர் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க அனுமதி வழங்கலாம்.
நகரபிதா மற்றும் மாவட்ட ஆணையாளர், கல்வி நிர்வாகம் ஆகியோர் இடையே ஒத்துழைப்பு அவசியம்.
குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க பெற்றோருக்கு விருப்பமுள்ள இடங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலான பரீட்சைகள் முடிந்திருந்தாலும், Bac உரையாடல் பரீட்சைகள் (oraux du bac de français) இன்னும் நடைபெற வேண்டியுள்ளது.
இதற்காக:
மாணவர்களின் உடல்நிலையைப் பொருட்படுத்தி நேர அட்டவணையை மாற்றலாம்.
மதிப்பீட்டாளர்களுக்கும் இளையவர்களுக்கும் ஏற்ப இலகுவான நடைமுறை அமல்படுத்தப்படும்.
தற்போது பிரான்சில், வெப்பநிலை உச்சத்தை அடைந்த பிறகு பாடசாலைகளை மூட சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட வெப்பவிகிதத் தொடக்கம் (legal temperature threshold) இல்லை.
ஆனாலும் நடப்புத் தேவைக்கேற்ப, உள்ளாட்சி நிர்வாகங்கள் பாடசாலை மூடல்களை அறிவிக்க முடியும்.