Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி: பா.ஜ., அதில் அங்கம் வகிக்கும்: அமித்ஷா

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி: பா.ஜ., அதில் அங்கம் வகிக்கும்: அமித்ஷா

27 ஆனி 2025 வெள்ளி 11:03 | பார்வைகள் : 136


தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. அந்த ஆட்சியில் பா.ஜ., அங்கம் வகிக்கும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார். அவரது முழுமையான பேட்டி:

பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டு ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக எதை கருதுகிறீர்கள்?

என்னை பொறுத்தவரை, மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என்பது, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தி இருப்பதுதான். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்தபோது, நிர்வாகம் சீரழிந்து கிடந்தது. உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வங்கிகளும் மோசமான நிலையில் இருந்தன. மொத்தத்தில், பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. தற்போது, அந்த காட்சி முழுமையாக மாறிவிட்டது.

இப்போது, உலகின் வலுவான, மிகப்பெரிய பொருளாதாரம் உள்ள நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. வாராக்கடன் அளவு இரட்டை இலக்கத்தில் இருந்து, 2.3 சதவீதமாக குறைந்துள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த 26 கோடி பேர், அதில் இருந்து மீண்டிருக்கின்றனர். 80 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு, 5 லட்சம் ரூபாய்க்கான இலவச சுகாதார காப்பீடு, 5 கிலோ இலவச கோதுமை அல்லது அரிசி, மின்சாரம், குடிநீர் என மத்திய அரசின் நலத் திட்டங்கள் சென்றடைகின்றன. ஏழை மக்களுக்கு 70 ஆண்டுகளாக கிடைக்காத வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியை, 11 ஆண்டுகளில் மோடி சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் எண்கள் மட்டுமே, உண்மையான பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனவே?

மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 லட்சம் கோடி டாலரில் இருந்து 4.20 லட்சம் கோடி டாலராக இரட்டிப்பானதைக்கூட பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், மூலதனச் செலவு 1.90 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 10.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி? இது வளர்ச்சிக்கான ஒரு மைல் கல் இல்லையா? தனி நபர் வருமானம் 68,572 ரூபாயில் இருந்து இரண்டு மடங்கு உயர்ந்து 1,33,488 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. குற்றஞ்சாட்டுவோர், இது குறித்து என்ன சொல்லப் போகின்றனர்?

அன்னிய நேரடி முதலீடு 143 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சராசரி பண வீக்கம் 10.10 சதவீதத்தில் இருந்து 4.60 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அது அவ்வளவு எளிதில் குறைந்துவிடுமா? அன்னிய செலாவணி கையிருப்பு இரண்டு மடங்கு அதிகரித்து, 65,400 கோடி டாலராக உயர்ந்திருக்கிறதே? சர்வதேச அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனையில், இந்தியாவின் பங்கு 50 சதவீதத்துக்கும் அதிகம். 44 லட்சம் கோடி ரூபாய்க்கு நேரடி பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதையெல்லாம் சாதனை என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

   தமிழகத்தில் எங்கள் அரசு அமைந்ததும், சட்ட விரோத குடியேறிகள் இல்லாத மாநிலமாக நிச்சயம் மாற்றுவோம்.

 

மோடி அரசின் லட்சியமாக, 'சுய சார்பு இந்தியா' திட்டம் இருக்கிறது. தற்போதைய உலகளாவிய சூழலில், அது வெற்றி பெற்றதாக சொல்ல முடியுமா?

பாதுகாப்பு துறையில் 1.30 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்து, அதில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். இதை, 2029க்குள் 50,000 கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு. உள்நாட்டு மொபைல் உற்பத்தி, 26 சதவீதத்தில் இருந்து 99 சதவீதத்தை கடந்துள்ளது. 2014ல், 20 சதவீதம் பொம்மைகள் மட்டுமே இந்தியாவில் தயாராகின. இப்போது, அப்படி இல்லை.

மத்திய அரசின், 'கிழக்கு நோக்கிய கொள்கை' எந்த அளவுக்கு வெற்றி அடைந்துள்ளது? கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளன?

மோடி அரசு, வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கிறது. அனைத்து வடகிழக்கு மாநில தலைநகரங்களும், 2027க்குள் ரயில், விமானம், சாலை வழியாக, இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும். கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளன. அரசின் விடாமுயற்சியால், போடோ, உல்பா உள்ளிட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் 12 அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

திரிபுராவில் புரு குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்காக, நிலம் வழங்கப்பட்டு, 7,000 குடும்பங்கள் மறுவாழ்வு பெற்றன. கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் பெற்ற நன்மைகள், முந்தைய எந்தவொரு ஆட்சிகளுடனும் ஒப்பிட முடியாது.

லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. அதை எதிர்த்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ஏன் செயல்படுத்துகிறீர்கள்?

முதலில், உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, ஏதேனும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறதா? அல்லது லோக்சபா தொகுதி எல்லை நிர்ணய முறை என ஏதேனும் முடிவு செய்யப்பட்டு உள்ளதா? இப்போது, இந்த பிரச்னையை தி.மு.க., ஏன் எழுப்புகிறது என்றால், கட்சித் தலைவர் மகன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதால் எழுந்த உட்கட்சி பூசல்கள், தி.மு.க.,வினரின் ஊழல், மோசமடைந்த சட்டம் - ஒழுங்கு போன்றவற்றில் இருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான், இப்படியெல்லாம் இல்லாத விஷயங்களை சொல்லி, அதை பூதாகரப்படுத்துகின்றனர்.

உண்மையிலேயே தொகுதி வரையறையை செயல்படுத்தும்போது, தமிழகத்துக்கு எந்த அநீதியும் நடக்காது எனவும், அனைவருடனும் ஆலோசனை நடத்தப்படும் எனவும், ஏற்கனவே நான் தமிழகத்துக்கு வந்தபோது, தமிழக மண்ணில் வைத்தே உறுதியாக சொல்லி இருக்கிறேன்.

மேலும், மோடி அரசு, தமிழகத்துக்கு உரிய நிதியை தரவில்லை எனவும் தி.மு.க., தரப்பு கூப்பாடு போடுகிறது. உண்மையில், 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் காங்கிரசுடன் தி.மு.க.,வும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மொத்தம் 1.53 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு நிதியாக வழங்கப்பட்டது. ஆனால், பா.ஜ., அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது, அவர்கள் வழங்கியதை விட மூன்றரை மடங்கு அதிகம்.

இது தவிர, உள்கட்டமைப்புக்கு 1.43 லட்சம் கோடி, சாலைகளுக்கு 63,000 கோடி, ரயில்வேக்கு 77,000 கோடி, 11 மருத்துவக் கல்லுாரிகளுக்கு 2,000 கோடி, வீடு தோறும் குடிநீர் திட்டத்துக்கு 1.11 லட்சம் கோடி ரூபாய் என தமிழகத்துக்கு ஏராளமாக மத்திய அரசு செலவிட்டுள்ளது.

திருச்சியில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எங்களை பொறுத்தவரை, தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் செய்ததில், எங்களுக்கு முழு திருப்தி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளதால், பெரிய முதலீடுகள் வராமல் போய்விட்டன. தி.மு.க., அரசு தன் பங்கை ஆற்றத் தவறிவிட்டது.

ஒரு பக்கம், நிதி தரவில்லை என்று தி.மு.க., சொல்கிறது; மறுபக்கம், நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்கிறீர்கள்...

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படாமலும், குறைபாடுகளுடன் செயல்படுத்துவதாலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் திட்டங்களை தவறாக தி.மு.க., அரசு சித்தரிக்கிறது; பல திட்டங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பெயரளவில் அவர்கள் செயல்படுத்திய திட்டங்களும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருக்கின்றன.

ஐ.சி.டி.எஸ்., நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. பிரதமரின் 'மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தில், முந்தைய நிதி ஒதுக்கீட்டை முறையாக செலவு செய்யவில்லை. ஆனால், அடுத்த தவணையை விடுவிக்குமாறு தி.மு.க., அரசு கோருகிறது. வீடுதோறும் குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்திலும் போலி இணைப்புகள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோல், வீடு கட்டும் திட்டத்திலும் தகுதியற்றவர்களுக்கு வீடுகளை வழங்கி, உண்மையான பயனாளிகளை ஏமாற்றுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டால் தான் பெரிய முதலீடுகள் வராமல் போய்விட்டன என்கிறீர்கள். அப்படி என்ன பாழ் போய்விட்டது?


தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை பற்றி இனியும் மறைத்து வைக்க ஒன்றும் இல்லை. ஒரு மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு மோசமான நிலைக்கு செல்லும்போது, அதன் விளைவுகளை அதிகமாக சந்திப்பது பெண்கள், விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஏழைகள்.

   தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு, மதுபான மாபியா, மணல் மாபியா ஆகியவை உச்சத்தில் இருக்கின்றன.

 

தேசிய குற்ற வாரிய ஆவணங்களின்படி பார்த்தால், பட்டியல் ஜாதியினருக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 21 சதவீதம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது, தேசிய அளவில் 39.1 சதவீதமாக இருக்கிறது.

நெல்லையில் தலித் பிரதிநிதிகள் பதவியேற்கக்கூட அனுமதிக்கப்படவில்லை; கவர்னர் தலையிட வேண்டி இருந்தது. தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு நாற்காலி மறுக்கப்பட்டு, தரையில் அமர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

ஊழல் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டது. தி.மு.க.,வின் ஊழல் பட்டியல் மிக நீளமானது. 39,775 கோடி ரூபாய் மதுபான ஊழல், 5,800 கோடி ரூபாய் மணல் ஊழல், 3,000 கோடி ரூபாய் 'எல்காட்' ஊழல், 4,400 கோடி ரூபாய் எரிசக்தி ஊழல், 3,000 கோடி ரூபாய் போக்குவரத்து துறை ஊழல் என ஏராளம்.

வேலைக்காக விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் நடக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு நபருக்கு 41,503 ரூபாய் மோசடி நடந்துள்ளது. அப்படி என்றால், மொத்த தொகையை கற்பனை செய்து பாருங்கள். வேலைக்காக விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் நடக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு நபருக்கு 41,503 ரூபாய் மோசடி நடந்துள்ளது. அப்படி என்றால், மொத்த தொகையை கற்பனை செய்து பாருங்கள்.

சரி, இவ்வளவும் சொல்கிறீர்கள். மத்திய அரசால் அதை கட்டுப்படுத்த முடியாதா?

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு, மதுபான மாபியா, மணல் மாபியா ஆகியவை உச்சத்தில் இருக்கின்றன. ஆனால், சட்டம் - -ஒழுங்கு என்பது மாநில பிரச்னை.

எனவே, தேசிய குற்றவியல் அமைப்புகளுக்கு உள்ள அதிகார வரம்பிற்குள், தமிழகத்தில் உள்ள அந்த கும்பல்களை கைது செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம்.

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அல்லது போலி ஆவணங்களுடன் வங்கதேசத்தினரும், ரோஹிங்கியாக்களும் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதாக கூறப்படுகிறதே?

தமிழகத்தில் எங்கள் அரசு அமைந்ததும், சட்ட விரோத குடியேறிகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை நிச்சயம் மாற்றுவோம்.

எங்கள் அரசு என்கிறீர்கள். கூட்டணி ஆட்சி அமையுமா?

சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.,வும் ஒரு அங்கமாக கண்டிப்பாக இருக்கும்.

இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்களே. எது நம்பிக்கையை கொடுக்கிறது?

லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும். எனவே, சட்டசபை தேர்தலில், கூடுதல் பிரசாரத்தின் வாயிலாக ஓட்டுகளை திரட்டினால், எங்கள் அரசு அமையப் போவது நிச்சயம்.

ஹிந்து மத வெறுப்பு பிரசாரத்தில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது. இதை, அரசியல் பிரச்னையாக பா.ஜ., கொண்டு செல்லுமா?

இங்கு ஒரு பிரச்னையை, நாங்கள் உருவாக்கத் தேவையில்லை. எந்தவொரு மத சித்தாந்தத்துக்கும் எதிராக அவர்கள் பேசினால், தன்னிச்சையாகவே மக்களை விரோதித்துக் கொள்கின்றனர். நாங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவர்களின் பாவங்களுக்கு தக்க தண்டனையை, தமிழக மக்கள் கொடுப்பர்.

பொது சிவில் சட்டத்தை இன்னும் ஏன் கொண்டு வரவில்லை?

பா.ஜ., அரசு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர, நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். பல மாநிலங்கள், அதற்கான குழுக்களை அமைத்துள்ளன. உத்தராகண்டில் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. மற்ற மாநிலங்களில், இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

'லவ் ஜிஹாத்' தொடர்பான சட்டத்தை கொண்டு வர, மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டு உள்ளது. இது போன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவது பற்றி பரிசீலிப்பீர்களா?

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள், அனைத்தையும் உள்ளடக்கி இருக்கின்றன. எனினும், மஹாராஷ்டிரா மாநில அரசின் சட்டம் வரும்போது, அது பற்றி யோசிப்போம்.

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. முர்ஷிதாபாத் வன்முறைக்கு பிறகும் கூட, அந்த மாநில அரசு எந்த வலுவான நடவடிக்கையையும் எடுக்கவில்லையே?

மே.வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியதோடு, அறிக்கைகளை கேட்டுள்ளது. அங்கு, பா.ஜ., அரசு அமையும்போது, இது போன்ற பாகுபாடு கொடுமையில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுவர். ஓட்டு வங்கிக்காக, அங்குள்ள திரிணமுல் காங்கிரஸ் அரசு நடுநிலையுடன் செயல்படவில்லை.

கடந்த சில மாதங்களாகவே, பா.ஜ., தலைவர் பதவிக்கு பல்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. யார் அடுத்த தலைவர்?

இதுவரை, அடுத்த பா.ஜ., தலைவர் யார் என தீர்மானிக்கவில்லை; வெகு விரைவில் முடிவு செய்யப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்