Paristamil Navigation Paristamil advert login

முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக்கு கணவர் அனுமதி வேண்டாம்: ஐகோர்ட்

முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக்கு கணவர் அனுமதி வேண்டாம்: ஐகோர்ட்

27 ஆனி 2025 வெள்ளி 11:03 | பார்வைகள் : 151


விவாகரத்து கோரும் முஸ்லிம் பெண்களுக்கு கணவரின் அனுமதி தேவையில்லை; அது அவர்களின் உரிமை' என, தெலுங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, மத சம்பிரதாயத்தின்படி, 'கூலா' எனப்படும், விவாகரத்து அறிவித்தார்.

அதை ஏற்க மறுத்த பெண்ணின் கணவர், இது தொடர்பாக திருமண பிரச்னைகளுக்கு சமரசம் செய்யும் முஸ்லிம்களுக்கான சமூக நல அமைப்பான சதா -- இ -- ஹக் - ஷராய் கவுன்சிலை நாடினார்.

மனைவி கோரியபடியே விவாகரத்துக்கான சான்றிதழை அந்த அமைப்பு வழங்கியது. அதை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் முறையிட்டார். அங்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

ஒரு இஸ்லாமிய பெண், விவாகரத்துக்கான, 'கூலா' அறிவிப்பை வெளியிடுவது, அவரின் தனிப்பட்ட உரிமை. இஸ்லாமிய சட்டத்தின் கீழ், மனைவி ஒருதலைபட்சமாக கூலா வாயிலாக தன் திருமணத்தை கலைக்க முடியும்.

இதற்கு கணவரின் ஒப்புதலோ அல்லது முப்தி அல்லது தார் -- உல் -- காசாவால் கூலானாமா வழங்குவதோ அவசியமில்லை. அத்தகைய அமைப்புகள், பெண் அல்லது ஆணுக்கு திருமணம் தொடர்பான ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும். இருவரின் உரிமையில் தலையிட முடியாது.

அதேபோல், குடும்ப நல நீதிமன்றங்களின் பங்கு, கூலாவுக்கான கோரிக்கையை சரிபார்ப்பது, சமரச முயற்சியை உறுதி செய்வது ஆகும். அவசியம் ஏற்பட்டால், திருமணத்துக்கான வரதட்சணையை பெண் திருப்பித்தர தயாராக இருக்கிறாரா என்பதை உறுதி செய்யலாம்.

இந்த நடைமுறை விசாரணையாக மாறக்கூடாது. திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் முத்திரையை இடுவதுதான் நீதிமன்றத்தின் ஒரே பங்கு.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்