Paristamil Navigation Paristamil advert login

கவர்னர் விழாவில் தேசிய சின்னங்கள் மட்டுமே இருக்க வேண்டும்: பினராயி

கவர்னர் விழாவில் தேசிய சின்னங்கள் மட்டுமே இருக்க வேண்டும்: பினராயி

27 ஆனி 2025 வெள்ளி 05:03 | பார்வைகள் : 142


கேரளாவில், கவர்னர் பங்கேற்ற விழாக்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாரத மாதா படம் வைக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பிய நிலையில், 'கவர்னர் விழாக்களில் தேசிய சின்னங்கள் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும்' என, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்திஉள்ளார்.

பாரத மாதா


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கவர்னராக உள்ளார். கடந்த 4ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த சுற்றுச்சூழல் தின விழாவில், காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டிருந்தது.

ஆர்.எஸ்.எஸ்., பயன்படுத்தும் இந்த படம், அரசு விழாவில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில அமைச்சர் பிரசாத், அங்கிருந்து வெளியேறினார்.

இந்த சலசலப்பு அடங்குவதற்குள், கடந்த வாரம் நடந்த மற்றொரு விழாவிலும் அதேபோல் பாரத மாதா படம் காட்சிப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சிவன்குட்டி வெளிநடப்பு செய்தார்.

இந்த விவகாரம், மாநில அரசியலில் புயலை கிளப்பியதை அடுத்து, கவர்னர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த சூழலில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிடும் விழா கேரள பல்கலையில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்றார். ஏராளமான பா.ஜ., தொண்டர்களும் பங்கேற்றனர். கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்திய மாணவர் கூட்டமைப்பு, கேரள மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.

அப்போது, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட இருந்த மோதல், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கடிதம்


இந்நிலையில், பாரத மாதா விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கவர்னர் பங்கேற்கும் நிகழ்வுகளில் அரசியல் மற்றும் மத சின்னங்களை பயன்படுத்துவதையோ, காட்சிப்படுத்துவதையோ அரசியலமைப்பு நெறிமுறை தடை செய்கிறது.

'அதேசமயம், இது போன்ற நிகழ்வுகளில் தேசிய சின்னங்களையே காட்சிப்படுத்த வேண்டும் என அரசியலமைப்பு கட்டளையிடுகிறது. எனவே, கவர்னர் நிகழ்ச்சிகளில் தேசிய சின்னங்களை காட்சிப்படுத்துங்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, கவர்னர் மாளிகைக்கு முதல்வர் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்