Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மாநில நிர்வாகிகள் நியமிப்பதில் குழப்பம்; டில்லியில் நட்டாவுடன் நாகேந்திரன் சந்திப்பு

மாநில நிர்வாகிகள் நியமிப்பதில் குழப்பம்; டில்லியில் நட்டாவுடன் நாகேந்திரன் சந்திப்பு

25 ஆனி 2025 புதன் 09:37 | பார்வைகள் : 1184


தமிழக பா.ஜ.,வில், மாநில நிர்வாகிகளின் பதவியை பிடிக்க, மூத்த நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுவதால், அவர்களை நியமனம் செய்வதில், குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில், புதிய நிர்வாகிகள் பட்டியலுடன், டில்லி சென்ற தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

நெருக்கடி


இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழக பா.ஜ.,வில் மாவட்டத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும், நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு, மாவட்ட துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதேபோல், மாநில அளவில், மாநில துணைத்தலைவர், செயலர், பொதுச்செயலர், பொருளாளர் என, 28 பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த பதவிகளில், அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கட்சி பணியில் சிறப்பாக செயல்படுவோரை, நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

ஆனால், மேலிடத் தலைவர்களுடன் தொடர்பில் உள்ள சிலர், தங்களை மாநில பதவிகளில் நியமிக்குமாறு, தலைமைக்கு நெருக்கடி தருகின்றனர். இதனால், மாநில நிர்வாகிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

ஆலோசனை


இந்த சூழலில், மாநில நிர்வாகிகளின் உத்தேச பட்டியலை எடுத்துக்கொண்டு, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன் ஆகியோர், கோவையில் இருந்து, டில்லி சென்றனர்.

அவர்கள், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம், நேற்று பட்டியலை கொடுத்து, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசித்துள்ளனர். சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

மாநில நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்புக்கு முன், பட்டியலில் இடம்பெற வேண்டியவர்கள் குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகன் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பட்டியலில், அண்ணாமலையின் ஆதரவாளர்களையும் இணைத்தே பட்டியல் தயார் செய்ய வேண்டும் என, கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஜி அறிவுறுத்தியதைத் தொடர்ந்தே, இருவரும் அண்ணாமலையிடம், பட்டியல் குறித்து ஆலோசித்துள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வர்த்தக‌ விளம்பரங்கள்