ராமதாஸ் தனிச்செயலரிடம் தொடர்பு கூடாது: அன்புமணி

24 ஆனி 2025 செவ்வாய் 11:42 | பார்வைகள் : 138
அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, அவருடைய தனிச் செயலராக இருந்தவர் சுவாமிநாதன்.
அவரை, கடந்த 13ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தனது தனிச் செயலராகவும், செய்தி தொடர்பாளராகவும் நியமித்தார்.
தற்போது ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடைபெறும் மோதலில், கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் சுவாமிநாதன்.
அதையடுத்தே, அவரை தன்னுடைய தனிச் செயலராக நியமித்தார் ராமதாஸ். சுவாமிநாதனின் செயல்பாடுகள் அன்புமணியின் கவனத்திற்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக அன்புமணி தனது 'எக்ஸ்' தள பக்கத்தில், 'எனது முன்னாள் உதவியாளர் சுவாமிநாதனுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. 'பா.ம.க.,வினர், எனது நலன் விரும்பிகள் சுவாமிநாதனுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.
இது, அன்புமணி, ராமதாஸ் இடையேயான மோதலை அதிகப்படுத்தி இருக்கிறது.