எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

24 ஆனி 2025 செவ்வாய் 08:42 | பார்வைகள் : 153
அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியம்'' என்று சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மாநாடு சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொள்கிறார்.
பீஜிங் சென்றுள்ள அவர், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்யியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
இருநாடுகளின் உறவுகளில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து இருவரும் மதிப்பீடு செய்தனர். ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதன் அவசியத்தையும் இருவரும் சுட்டிக்காட்டினர்.
பிராந்தியத்தில் ஒட்டுமொத்தமாக அமைதி, ஸ்திரத்தன்மையை பேண, பயங்கரவாதம், எந்த வடிவங்களில் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று சந்திப்பின் போது தோவல் வலியுறுத்தினார்.
பரஸ்பர நலன் சார்ந்த பிற இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.