எவின் சிறை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்தது பிரான்ஸ்!

24 ஆனி 2025 செவ்வாய் 00:17 | பார்வைகள் : 493
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜோன்-நொயல் பாரோ (Jean-Noël Barrot), ஈரானில் உள்ள எவின் (Evin) சிறை மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலை ஏற்க முடியாதது என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். இச்சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக சடட்டத்தை மீறி சிறை வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு குடிமக்களான சிசில் கோலர் மற்றும் ஜாக் பாரிஸ் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் பிரான்சின் கவலையை வெளிப்படுத்தினார். தாக்குதலுக்குப்பின் இரு பிரெஞ்சு கைதிகளின் உடல் நலமும் உடனடியாக விடுதலையும் அவர் தனது ஈரானிய பிரதிநிதியிடம் கோரியதாக தெரிவித்தார்.
எமானுவல் மக்ரோனின் கண்டனம்
நோர்வேவில் நடந்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதிபர் எமானுவல் மக்ரோன், இத்தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்கான நோக்கங்களுடன் பொருந்தவில்லை என்றும், இது பொது மக்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கி உள்ளது என்றும் தெரிவித்தார்.
தாக்குதலில் சிசில் கோலர் மற்றும் ஜாக் பாரிஸ் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், பிரான்ஸ் தூதர்கள் அவர்களை நேரில் பார்வையிடுவதற்கான அனுமதியையும் கோரியுள்ளனர். அதேவேளை, போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரெஞ்சு குடிமக்கள் மீட்பு
நிலவும் போர் நிலைமை காரணமாக, 160 பிரெஞ்சு குடிமக்கள் இஸ்ரேலிலிருந்து ஓர்லி விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இன்னும் இரண்டு மீட்புப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து, இந்த நிலைமைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.