Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிசுவை வடிகானில் வீசிய இளம் தாய்

இலங்கையில் சிசுவை வடிகானில் வீசிய இளம் தாய்

22 ஆனி 2025 ஞாயிறு 12:10 | பார்வைகள் : 245


புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வார்ட்டின் குளியலறையில் உள்ள வடிகானில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் புத்தளம் தள வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இளம் யுவதி, புத்தளத்தில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரிந்த கற்பிட்டி, ஆனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த இளம் யுவதி, புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, யாருக்கும் தெரியாது ரகசியமாக சிசுவை பெற்றெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றெடுத்த தனது குழந்தையை சந்தேக நபரான இளம் யுவதி,  வைத்தியசாலையில் குளியலறை வடிகானில் கைவிட்டுச் சென்றதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பெண்கள் வார்டுக்குப் பொறுப்பான தாதியர் ஒருவர் குளியலறையை பரிசோதனை செய்துள்ளார்.

பின்னர், குளியலறையின் வடிகானை பரிசோதனை செய்த போது, குறித்த வடிகானுக்குள் வீசப்பட்ட நிலையில் சிசுவொன்று சிக்கி கிடப்பதை அவதானித்த உள்ளதுடன், சம்பவம் பற்றி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது, வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இளம் யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மரணம் தொடர்பில் புத்தளம் பதில் நீதவான் டி.எம். இந்திக தென்னகோன், சம்பவ இடத்திற்கு சென்று, நீதவான் விசாரணை முன்னெடுத்த பின்னர், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்