பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை

19 ஆடி 2025 சனி 09:55 | பார்வைகள் : 168
பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடமாடி வருவதை உளவுத்துறை கண்டறிந்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐ.நா., சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான இவன், 2016ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல், 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன்.
பஹல்காம் சம்பவத்தை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. இந்த தாக்குதலின் போது மசூத் அசாரின் குடும்பம் கொல்லப்பட்டது.
இந் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவனது நடமாட்டம் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பஹாவல்பூரில் இருந்து 1000 கி.மீ., தொலைவில் உள்ள கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் தென்பட்டுள்ளான் என்றும் அந்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதேபோல, ஸ்கர்டு பகுதியிலும் அவனது நடமாட்டம் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இந்த ஸ்கர்டு பகுதி என்பது, கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிக்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இங்கு 2 மசூதிகள், அரசு மற்றும் தனியார் ஓய்வு விடுதிகள் அதிகம் உள்ளன.
அண்மையில், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி, மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் தான் ஒளிந்து கொண்டிருப்பான். பாகிஸ்தான் மண்ணில் அவன் இருந்தால்,உடனடியாக பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று கூறி இருந்தார்.