கனிமவளங்கள் தேசிய சொத்து பாதுகாக்க தவறினால் அதிகாரிகளே பொறுப்பு: உயர்நீதிமன்றம்

17 ஆடி 2025 வியாழன் 12:42 | பார்வைகள் : 160
கனிமவளங்கள் தேசிய சொத்து. பாதுகாப்பதில் கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறு நடந்தால் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சின்ன முத்தனம்பட்டி ஜெயபால் தாக்கல் செய்த பொதுநல மனு:
வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இவற்றுடன் ரசாயனம் கலப்பதால் 'எம்' சாண்ட் போல் தோற்றமளிக்கிறது. சிலர் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஆலைகள் நடத்துகின்றனர்.
மணல் கலவையை தண்ணீரில் கழுவி, ரசாயனம் கலந்த கழிவுநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் விடுகின்றனர். நீர்நிலைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கனிமவளத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறலுக்கு அபராதம் விதித்து சட்டவிரோத மணல் ஆலைகள், குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது அரசு வழக்கறிஞர், ''சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய வளாகங்கள் ஏற்கனவே பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகமது ஹனீப், ''முன்புற வாயில் கதவு அதிகாரிகளால் பூட்டப்பட்டிருந்தாலும், பின்புற வாயிலை பயன்படுத்துகின்றனர்,'' என்றார். புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
நீதிபதிகள், 'அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் அல்லது வேறுவிதமாக இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றனவா என்பதில் சந்தேகம் எழுகிறது. கலெக்டர் ஜூலை 16 ல் ஆஜராகி தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது. கலெக்டர் சரவணன் ஆஜரானார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், அரசு பிளீடர் திலக்குமார்: சவடு மண்ணை சுத்தம் செய்து விற்பனை செய்யும் 9 ஆலைகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன. அவற்றிலிருந்த இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. குவாரி நடவடிக்கைகள் எதுவும் இல்லை. கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் என்றனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கனிமவளங்கள் தேசிய சொத்து. அவற்றை பாதுகாப்பதில் கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். கலெக்டர் தனது கீழ்நிலை அதிகாரிகள் மூலம் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். தவறு நடந்தால் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.