சங்கூர் பாபா மதமாற்ற விவகாரம்; 14 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

17 ஆடி 2025 வியாழன் 11:42 | பார்வைகள் : 195
மதமாற்ற வழக்கில் சங்கூர் பாபா கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன், என்பவர் மதமாற்றம் உள்ளிட்ட நாச வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆரம்பத்தில் தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்தது.முதலில் மதமாற்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட விசாரணை, தற்போது பயங்கரவாதம், பல நூறு கோடி மோசடி என விதவிதமாக விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், சாங்கூர் பாபா மதமாற்ற விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களில் 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் 12 இடங்களிலும், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பந்த்ரா, மஹிம் ஆகிய இரு இடங்களிலும் இன்று காலை 5 மணி முதல் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்ட நவீன் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஷெஹ்சாத் ஷேக் என்ற நபருக்கு சுமார் 2 கோடி ரூபாய் மாற்றப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.