பிரான்ஸ் மீது 2,200 சைபர் தாக்குதல் நடத்திய ரஷ்ய ஆதரவு ஹேக்கர் குழு பிடிபட்டது!!!

16 ஆடி 2025 புதன் 16:01 | பார்வைகள் : 653
NoName என்ற ரஷ்ய ஆதரவு ஹேக்கர் குழு கடந்த 2023 முதல் பிரான்ஸில் மட்டும் 2,200-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளை பாதித்துள்ளன. இக்குழுவின் சர்வர் மையம் கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டுள்ளது.
இது Europol மற்றும் Eurojust நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கையின் போது உலகம் முழுவதும் பரவியிருந்த botnet (தானியங்கியான சர்வர் வலைப்பின்னல்) குழுவும் அழிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை 8 ரஷ்ய பிரஜைகளுக்கு சர்வதேச கைது உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும், 24 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, Telegram வழியாக குழுவை ஆதரித்த பலருக்கு சட்டபூர்வ எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
NoName குழு ரஷ்யாவை ஆதரித்து, DDoS தாக்குதல்களால் இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.