நாடோடிகள் - சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் - உள்துறை சுற்றறிக்கை!

9 ஆடி 2025 புதன் 03:00 | பார்வைகள் : 340
2025 ஜூலை 7 ஆம் திகதி, பிரான்சின் உள்துறை அமைச்சகம், கோடைகாலத்துக்கான நாடோடிக் குழுக்களின் (GENS DU VOYAGE) நகர்வுகளை முதலே கையாளும் வகையில், மாகாண ஆணையர்களுக்கு ஒரு முக்கியமான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதன் நோக்கம், நாடோடிகள் சமுதாயத்தினர் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதாகும்.
சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
முன்னறிவிப்பு நடவடிக்கைகள்
மாகாண ஆணையாளர்கள், தங்களது பகுதிகளில் நாடோடிக்குழுக்கள் தங்கக்கூடிய இடங்கள் இல்லாதபோது அல்லது ஏற்கனவே நிரம்பியிருந்தால், தற்காலிகமான இடங்களைத் திட்டமிட வேண்டும்.
ஒவ்வொரு மாகாணத்திலும், சமூகத்துடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் தொடர்பாளரகள் நியமிக்கப்படுவர். இவர்கள் வாதங்களையும் முரண்பாடுகளையும் சமாளிக்கும் பொறுப்புடன் இருப்பார்கள். தேவையான சமயத்தில் 'திடமான நடவடிக்கைகள்' மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் அதிகாரம்
குறித்த பிரதேசம், நாடோடிகுழுக்களை ஏற்கும் அரசுத் திட்டங்களைச் சரியாக அமல்படுத்தியிருந்தால், அங்கு சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படும் காணிகளை விரைவாக காலி செய்ய, ஆணையாளர்கள் கட்டாய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
நான்கு முக்கிய நடவடிக்கைகள்
தண்டனைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கடுமைப்படுத்தல்
மாகாண ஆணையாளர்களுக்கான அதிகாரங்களை விரிவாக்கம்
நாடோடிக் குழுக்களின் பொறுப்புணர்வை அதிகரித்தல்
உள்ளூராட்சி நிறுவனங்களை, தங்கள் சட்டபூர்வ கடமைகளைச் செய்யத் தூண்டுதல்
2000 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, பிரான்சின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடோடிக்குழுக்களை வரவேற்கும் திட்டம் இருக்க வேண்டும். 5,000 பேருக்கு மேற்பட்ட மக்கள்தொகையுள்ள நகரங்கள், அவசியமாக இதில் அடங்க வேண்டும்.
16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவின் பரிந்துரைகளிலிருந்து, 22 முன்மொழிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, விரைவில் சட்டமசோதாவாக வடிவமைக்கப்பட உள்ளன.
இச்சுற்றறிக்கை, 'அரசின் அதிகாரத்தை உறுதியாக வலியுறுத்தும்' முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பிரிவுகள், இது பயணர்கள் சமுதாயத்துக்கு எதிரான ஒரு வன்மையான அரசியல் நடவடிக்கை எனவும் கருதுகின்றன.