யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

5 ஆனி 2025 வியாழன் 12:08 | பார்வைகள் : 412
யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் மக்களிடம் மீளக் கையளிக்க முடியாத நகைகளை வடக்கின் அபிவிருத்திக்கான நிதியத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட தங்க நகைகளை ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இவ்வேளையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இராணுவத்தினர் வசமிருந்த கிலோ கணக்கான தங்கம் தற்போது நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை யுத்த காலத்தில் வடக்கில் மீட்கப்பட்டவையாகும். இவை தங்கமாகவே இருக்கின்றன. இவை தொடர்பில் இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எவ்வளவு தங்கம் உள்ளது என்பதனை ஆராய்ந்து அந்த அறிக்கையை பெற்ற பின்னர் அரசாங்கத்தால் மக்களுக்கு அந்த தங்கத்தை தங்களுடையது என்பதனை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கலாம்.
அத்துடன் யுத்த நிலைமையால் நிருபிக்க முடியாத பகுதியும் இருக்கலாம். மக்கள் பெற்றுக்கொள்ளாதவற்றை வடக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அவற்றில் அந்த தங்கத்தின் பகுதியை போட்டும், அரசாங்கத்தினால் நிதி வழங்கியும் வடக்கிற்கான விசேட அபிவிருத்தி நிதியத்தை அமைக்கவும், அதற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ரீதியிலும் வாழும் இலங்கையர்களுக்கும் யுத்தத்தால் நாட்டில் இருந்து சென்ற மக்களுக்கும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.