Paristamil Navigation Paristamil advert login

அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா!

அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா!

5 ஆனி 2025 வியாழன் 12:08 | பார்வைகள் : 607


விவசாய பயிர்களை அழித்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய இரண்டு சீன விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளான 33 வயதான யுன்கிங் ஜியான் மற்றும் 34 வயதான ஜுன்யோங் லியு ஆகியோர் ஃபுசேரியம் கிராமினேரம் என்ற பூஞ்சையை விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு கடத்தியதற்காக கைதாகியுள்ளனர்.

லியு, டெட்ராய்ட் பெருநகர விமான நிலையம் வழியாக அமெரிக்காவிற்குள் பூஞ்சையை கடத்தியுள்ளார். அவர் தனது காதலி ஜியான் பணிபுரிந்த மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்த பூஞ்சையை கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.

அதேபோல, லியு இந்த நோய்க்கிருமி ஆராய்ச்சியை நடத்தும் ஒரு சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. லியு அபாயகரமான இந்த பூஞ்சையை கடத்துவதை அறிந்த எஃப்பிஐ அவரை கைது செய்தது.

இதுகுறித்து பேசிய எஃப்பிஐ தலைவர் காஷ் படேல், இந்த பூஞ்சை வேளாண் பயங்கரவாத ஆயுதம். இந்த பூஞ்சை பயிர்களில் தலை கருகல் நோயை ஏற்படுத்தும். இது உலகளவில் பில்லியன் கணக்கான இழப்புகளுக்கு காரணமான ஒரு பேரழிவு தரும் பயிர் நோயாகும்.

இது மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்தார் இந்த பூஞ்சை தொடர்புடைய ஆராய்ச்சியை ஆதரிப்பதற்காக ஜியான் சீன அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்றதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டதாகவும் எஃப்பிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜியான் மற்றும் லியு ஆகியோர் சதித்திட்டம், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்துதல், தவறான அறிக்கைகளை வெளியிடல் மற்றும் விசா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்று மிச்சிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜியானும் லியுவும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நோய்க்கிருமி உலகளவில் பில்லியன் கணக்கான டாலர் பயிர் இழப்புகளுக்கு காரணமாக இருந்து வருகிறது. இது கோதுமை, பார்லி, சோளம் மற்றும் நெல் பயிரை பாதிக்கும் ஒரு அழிவுகரமான பயிர் நோயாகும்.

இப்பூஞ்சை மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் மைக்கோடாக்சின்களை உருவாக்குகிறது.

மேலும் இந்த பூஞ்சை மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்