Paristamil Navigation Paristamil advert login

தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் ஸ்டாலின் முயற்சிக்கு வேட்டு வைக்குமா? கமல் பேச்சு குறித்து தி.மு.க., கலக்கம்

தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் ஸ்டாலின் முயற்சிக்கு வேட்டு வைக்குமா? கமல் பேச்சு குறித்து தி.மு.க., கலக்கம்

5 ஆனி 2025 வியாழன் 10:39 | பார்வைகள் : 275


தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என, கமல் கூறியது, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக, தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு வேட்டு வைத்து விடுமோ என, தி.மு.க.,வினரிடம் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 24ம் தேதி, சென்னையில் நடந்த, தக் லைப் திரைப்பட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல், 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்றார். இது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வரூபம்


கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கர்நாட்க முதல்வர் சித்தராமய்யா, 'கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியாது' என்றார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், கன்னட அமைப்பினரும், கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வருகின்றனர்.

கர்நாடக உயர் நீதிமன்றமும், இதே கருத்தை தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கமலுக்கு எதிராக, கர்நாடக முதல்வர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தமிழில் இருந்துதான் மற்ற திராவிட மொழிகள் தோன்றின என்பது, தி.மு.க., எப்போதும் பேசி வருவதுதான். சினிமா வெளியீட்டு விழாவில் கமல் பேசியதால், படத்திற்கு தடை விதித்து பெரிய பிரச்னையாக்கி உள்ளனர்.

மத்திய பா.ஜ., அரசை கடுமையாக எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கருத்து மோதல்


அதற்கு கிடைத்த முதல் வெற்றியாக, லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய கூட்டம் அமைந்தது. அதில் கேரளா, தெலுங்கானா முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநில கவர்னர்களின் அதிகாரம் தொடர்பான தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பினார். இது தொடர்பாகவும், தென்மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இது, மத்திய பா.ஜ., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இச்சூழலில் கமலின் பேச்சால், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

இது தமிழகம் -- கர்நாடகம் இடையே இணக்கமின்மையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து மோதலும் ஏற்பட்டுள்ளது.

இதனால், மோடி அரசுக்கு எதிராக, தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான், இந்த விவகாரத்தில் எதுவும் கூறாமல் ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்