துருக்கியை உலுக்கிய 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!

4 ஆனி 2025 புதன் 05:06 | பார்வைகள் : 521
துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மர்மாரிஸ் (Marmaris) பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் பீதியால் முக்லா மாகாணத்தில் வீட்டை விட்டு வெளியேறி தப்பிக்க முயன்றி 14 வயது சிறுமி ஒருவர் உயிரழந்துள்ளார்.
மேலும், பீதியால் பாதுகாப்புக்காக ஓடிய சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் மத்தியதரைக் கடலில் மையம் கொண்டிருந்ததாகவும், உள்ளூர் நேரப்படி அதிகாலை 02:17 மணிக்கு ஏற்பட்டதாகவும் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிரேக்க தீவான ரோட்ஸ் உட்பட அண்டை பகுதிகளில் இது உணரப்பட்டது. துருக்கி முக்கிய பிளவுக் கோடுகளின் மத்தியில் அமைந்துள்ளது.
இதனால் அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 2023 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கியில் 53,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது.
மேலும், இலட்சக்கணக்கான கட்டிடங்களை அழித்தது அல்லது சேதப்படுத்தியது. இதனால், அண்டை நாடான சிரியாவின் வடக்குப் பகுதிகளில் மேலும் 6,000 பேர் உயிரிழந்தனர்.