அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்

3 ஆனி 2025 செவ்வாய் 17:02 | பார்வைகள் : 842
ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்திய இடங்களை தாண்டி, பாகிஸ்தானில் அதிக இடங்களில் நமது ராணுவம் தாக்குதல் நடத்தியது அந்நாடு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது.
ஆனால், இதற்கு பதிலடிகொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் ராணுவமோ, நமது நாட்டு அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ட்ரோன்களை வீசியது. இதனை நமது பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு விமானப்படை தளங்கள் மீது நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல் காரணமாக, அங்கு பலத்த சேதம் ஏற்படவே, போரை நிறுத்தும்படி கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நமது நாட்டு வெளியுறவு செயலர், அதிகாரிகள், ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் தினசரி நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர். தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விவரித்தனர். இந்தியா தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்த செயற்கைக்கோள் படங்களும் வெளியாகின.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து அந்நாட்டில் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. அதில், தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறிய இடங்களை விட கூடுதலாக 7 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பெஷாவர், ஜங், சிந்தில் உள்ள ஹைதராபாத், பாகிஸ்தானின் பஞ்சாப், பவல்நகர், அடோக் மற்றும் சோக் ஆகிய இடங்கள் சேதம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தினர் அளித்த பேட்டியில் இந்த இடங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. தற்போது பாகிஸ்தான் வெளியிட்ட ஆதாரங்கள் மூலம், அங்கு இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.