Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தி.மு.க., பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

2 ஆனி 2025 திங்கள் 06:38 | பார்வைகள் : 275


வஞ்சக பா.ஜ., - துரோக அ.தி.மு.க., கூட்டணியை வீழ்த்தி, 2026ல் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சியை ஏற்படுத்துவோம்' என்பது உட்பட 27 தீர்மானங்கள், மதுரை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதன் விபரம்:

கருணாநிதி பிறந்த ஜூன் 3 செம்மொழி நாளாக கொண்டாடப்படும். 102 இடங்களில் அவரது சாதனைகளை போற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பணி தொடர, தொண்டர்கள் துணை நிற்க வேண்டும்.

தொகுதி மறுவரையறை

மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.

விவசாயிகள், மாணவர்கள் கல்விக்கடன் தொடர்பான கெடுபிடிகளையும், நகைகளை மறு அடகு வைப்பதற்கு முழு தொகையையும் செலுத்த வேண்டும். அடமானம் வைக்கும் நகைகளின் உரிமை குறித்த ஆவணம் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாய் பங்கை 41 சதவீதமாக வழங்காமல், 33.16 சதவீதமாக வழங்கும் மத்திய அரசுக்கு கண்டனம். நிடி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியபடி வரிப்பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். தமிழ் மீதான விரோத போக்குடன் கீழடி ஆய்வை மறுப்பதற்கும், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கும் மத்திய அரசை கண்டிப்பது.

ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைவாக, முறையாக நடத்த வேண்டும். தமிழகத்திற்கு லோக்சபா பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.

தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். ரயில்வே திட்டங்களில் தமிழகத்தை புறக்கணிக்கும் பா.ஜ.,வை கண்டிப்பது.

மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுடன் இணைக்க வேண்டும் உட்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரண்டு புதிய அணி

இக்கூட்டத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி என இரண்டு புதிய அணி அமைப்புகள் உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் கட்சியின் சார்பு அணிகள், 23ல் இருந்து 25 ஆக அதிகரித்துள்ளது.

சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி ஸ்டாலின் பேசுகையில், ''புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி, பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் குறைந்தது, 30 சதவீதம் வாக்காளர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது,'' என்றார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்