Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம்

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம்

1 ஆனி 2025 ஞாயிறு 10:40 | பார்வைகள் : 5928


பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதனையடுத்து அங்கு இரவு நேரத்தில் மின்சாரம் துண்டித்தும், சைரன்களை ஒலிக்கவிட்டும் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு முன்னோட்டமாக கடந்த 7 ம் தேதி நாடு முழுதும் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது போர் ஏற்பட்டால் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் நிறுத்தப்பட்டு இருந்தாலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமானதாகவே உள்ளது. இச்சூழ்நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், கடந்த 29 ம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆபத்து காலத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள், விமான தாக்குதல் தொடர்பான சைரன், தீயணைப்புத்துறை, மீட்புப் படையின் திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருந்தது. ஆனால், நிர்வாக சீர்திருத்த காரணங்களினால், இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், தீயை அணைத்தல், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல், விமான தாக்குதலுக்கான சைரன் கேட்டால் எப்படி தற்காத்துகொள்வது என மக்களுக்கு பயிற்சி அளித்தல், ஆபத்தான இடங்களில் வசித்தவர்களை மீட்டல் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்தும் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது சைரன்கள் ஒலிக்கப்படவிட்டன.

 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026