'96' இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ...?

30 வைகாசி 2025 வெள்ளி 16:33 | பார்வைகள் : 1026
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் '96'. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. சேராமல் போன முதல் காதலின் நினைவு என்றென்றும் அழியாத ஒன்று என்பதைத் தனது தனித்துவமான திரைக்கதையில் சொல்லியதன் மூலம் தனக்கான இடத்தை மக்கள் மத்தியில் பிடித்தார் இயக்குநர் பிரேம் குமார். ராம், ஜானு கதாபாத்திரத்தில் திரிஷா, விஜய் சேதுபதி இருவரும் வாழ்ந்திருப்பார்கள். படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம், மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் படமாக உள்ளது என்றால் மறுக்க முடியாது. இதன்பின் பிரேம் குமார் இயக்கத்தில் அடுத்ததாக 'மெய்யழகன்' படம் ரிலீசானது. அந்தப் படமும் இப்போது பேசப்படும் படமாக அமைந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து '96' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையைத் தயார் செய்துவிட்டதாக சமீபத்தில் இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார். இதுகுறித்துப் பேசிய அவர், '96' பாகம் 2 படத்தின் கதையைத் தான் எழுதக்கூடாது என்று நினைத்ததாகவும், ஆனால் எழுதி முடித்தபின் கதையைப் படித்தபோது தனக்குப் பிடித்துவிட்டதாகக் கூறினார். இந்தக் கதையை விஜய் சேதுபதியின் மனைவியுடன் டிஸ்கஸ் செய்தபோது அவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறியிருந்த பிரேம் குமார் தற்போது முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதி முடித்திருக்கிறார்.
இந்நிலையில் தான், '96' இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், இதனால் பிரதீப் ரங்கநாதனை இயக்குநர் பிரேம் குமார் அணுகினார் என்றும், ஆனால், அவரும் நடிக்க மறுத்துவிட்டதாகவும், இதனால் தற்போது புதிய நடிகரை இயக்குநர் தேடி வருகிறார் என்றும் வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை இயக்குநர் பிரேம் குமார் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக பிரேம் குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. '96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் '96-2' எடுக்க முடியும். நடிகர் பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் '96-2' படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் முதல் பாகத்தைப் போலவே 2 ஆம் பாகத்திலும் விஜய் சேதுபதி, திரிஷா மீண்டும் சேர்ந்து நடிப்பது உறுதியாகியிருக்கிறது.