பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா

30 வைகாசி 2025 வெள்ளி 15:25 | பார்வைகள் : 712
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்களாகும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில், மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில் காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பாதுகாப்பு சூழ்நிலை, அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், பாகிஸ்தான் அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அத்துமீறலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் கடுமையான பதிலடி கொடுத்தனர்.குறுகிய காலத்தில் எதிரிகளின் முகாம்களை சேதப்படுத்தியதுடன், அழித்ததும் குறிப்பிடத்தக்க சாதனை.
எதிரிகளின் கண்காணிப்பு கட்டமைப்பை அழித்தது அவர்களுக்கு பெரிய பின்னடைவு. இதில் இருந்து மீள்வதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, நமது எல்லை மற்றும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, அதன் 118 முகாம்களை அழித்து எல்லை பாதுகாப்பு படையினர் உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பதிலடியை கொடுத்தனர்.
அவர்களின் கண்காணிப்பு கட்டமைப்பை தாக்கி அழித்தனர். ஒவ்வொன்றையும் அமைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.