இந்தியாவுடன் அமைதி பேச்சுக்கு தயார்: பாக்., பிரதமர் அறிவிப்பு

28 வைகாசி 2025 புதன் 12:34 | பார்வைகள் : 684
ஈரான் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு அதிபருடனான சந்திப்புக்கு பின், இந்தியாவிடம் அமைதி பேச்சு நடத்த தயார் என அறிவித்து உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்நிலையில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய நாடான ஈரானுக்கு நேற்று சென்றார். அவருடன் ராணுவ தளபதி சையத் அசீம் முனிரும் சென்றார்.
முதலில், அந்நாட்டு தலைவர் அயதுல்லா சையத் அலிகமேனியை சந்தித்து ஷெரீப் பேச்சு நடத்தினார். பின்னர், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் ஆலோசனை நடத்தினார். இரு தலைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “காஷ்மீர் பிரச்னை, நதிநீர் பகிர்வு, வர்த்தகம் என நீண்டகாலமாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். நாங்கள் அமைதியை விரும்பினோம்.
இப்போதும் அமைதியையே விரும்புகிறோம். எங்கள் அமைதி வாய்ப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நேர்மையாகவும், தீவிரமாகவும் எடுத்துக் காட்டுவோம்,” என்றார்.
இதைத் தொடர்ந்து, அயதுல்லா சையத் அலிகமேனி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 'பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகள் பேச்சு வாயிலாக தீர்க்கப்படும் என நம்புகிறோம்' என, தெரிவித்துள்ளார்.
ஈரானை தொடர்ந்து தஜிகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு ஷெரீப் செல்லவுள்ளார்.
இந்தியாவுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி ஈரான் அதிபரிடம், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியபோது, அதற்கு, ஈரான் அதிபர் நேரடியாக பதில் அளிக்காமல், பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்னையை பேசி தீர்க்கும்படி கூறினார். இதனால், ஷெபாஸ் ஷெரீப் ஏமாற்றம் அடைந்துள்ளார்.