Paristamil Navigation Paristamil advert login

அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி

அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி

22 ஆனி 2025 ஞாயிறு 10:44 | பார்வைகள் : 108


அடுத்த ஜென்மத்திலும் தி.மு.க., கூட்டணியில் ஓட்டை விழாது' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறினாலும், அவரது கட்சியின் மற்ற நிர்வாகிகள், கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி போன்ற விஷயங்களை பேசி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதி களில் காங்., போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் 2026 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 45 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என, கட்சியின் டில்லி மேலிடத்தில், தமிழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய் கட்சி

கடந்த மாதம், தமிழக காங்., தலைமை அலுவலகமான, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், 'தொகுதிகளை தி.மு.க., குறைத்து கொடுத்தால், விஜய் கட்சியுடன் கூட்டணி பேச வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி போன்ற விஷயங்களை மையமாக வைத்து, தமிழக காங்கிரசார் பேசி வருகின்றனர். இது தி.மு.க.,வுக்கும் கூட்டணிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால் உஷாரான செல்வப்பெருந்தகை, 'இந்த ஜென்மம் மட்டுமல்ல; அடுத்த ஜென்மத்திலும் தி.மு.க., கூட்டணியில் ஓட்டை விழாது' எனக்கூறி, சமாளித்து வருகிறார்.

அவர் தி.மு.க.,வுக்கு ஆதரவான திசையில் சென்றாலும், மற்ற நிர்வாகிகள் அதற்கு மாறான பாதையில் செல்கின்றனர். சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் கூறுகையில், 'தமிழகத்தில், கடந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டோம். இந்த முறை நிச்சயமாக அதிக தொகுதிகளை கேட்போம். சட்டசபை தேர்தலுக்கு தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு நடத்தும்போது அமைச்சரவையில் பங்கு குறித்தும் பேசுவோம்' என்றார்.

அதிகாரப்பகிர்வு

தமிழக காங்., துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: 'தமிழகத்தில், கூட்டணி ஆட்சி அமைப்போம்' என, அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிஉள்ளார். 'எங்கள் கட்சியுடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியில் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.

   இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில், அதிக தொகுதிகளை, மா. கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள் கேட்கும்போது, தேசிய கட்சியான காங்கிரசும் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத்தான் கட்சி நடத்துகிறோம்.

 

ஆட்சியில் பங்கு மட்டும் போதாது; துணை முதல்வர் பதவியும் சேர்த்து தந்தால் மட்டுமே, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவர். அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி குறித்து, டில்லி மேலிடத்தில் நாங்கள் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்