Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் Roissy விமான நிலையத்தில் 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள அழகு பொருட்கள் திருட்டு!

மீண்டும் Roissy விமான நிலையத்தில் 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள அழகு பொருட்கள் திருட்டு!

21 ஆனி 2025 சனி 14:33 | பார்வைகள் : 5377


Val-d’Oiseஇல் உள்ள Roissy விமான நிலைய சரக்கு பகுதியில், ஜூன் 14 இரவு, செபோராவுக்கு (Sephora) சொந்தமான 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள பர்பியூம்கள் மற்றும் அழகு பொருட்கள் திருடப்பட்டுள்ளது. 

திருடர்கள் சில நாட்களுக்கு முன்பு திருடிய டிராக்டரை பயன்படுத்தி செபோராவின் அழகு பொருட்கள் கொண்ட டிரெய்லரை இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பரிஸ் கொள்ளை தடுப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கண்காணிப்பு கேமரா வீடியோக்கள், தொலைபேசி பதிவுகள் மற்றும் சுற்றியுள்ளோரிடம் விசாரணைகள் மூலம் திருடர்கள் யார் என்பதையும், யார் இதைப் பற்றித் தெரிந்திருந்தார்கள் என்பதையும் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

Roissy-Charles-de-Gaulle  விமான நிலையம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் முக்கிய சரக்கு மையமாக உள்ளது. இதில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. 

இந்த பகுதியில், பர்பியூம், சிகரெட் மற்றும் செல்போன்கள் போன்ற மதிப்புள்ள சரக்குகள் அடங்கிய லாரிகளைத் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆண்டு இறுதி பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில், திருடிய பொருட்கள் மறைவாக விற்கப்படுவதற்கான தடயங்கள் காவல் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.